கென்னத் ஜெயரத்னத்தின் கருத்துகளை ஆராயும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம்

கென்னத் ஜெயரத்னத்தின் கருத்துகளை ஆராயும் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம்

1 mins read
c99b15d0-b4a4-4d69-9971-159bb9223f3a
சீர்திருத்த கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம். - படம்: தி நியூ பேப்பர்
Google News Preferred Icon

ரிடவுட் சாலையில் உள்ள இரண்டு வீடுகளை இரு அமைச்சர்கள் வாடகைக்கு எடுத்தது தொடர்பான சீர்திருத்த கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் தெரிவித்த கருத்துகளை தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகமும் ‘பொஃப்மா’ எனப்படும் இணையவழி பொய்ச்செய்திக்கும் சூழ்ச்சித் திறத்துக்கும் எதிரான பாதுகாப்புச் சட்டத்தின் அலவலகமும் ஆராய்கின்றன.

திரு கென்னத் ஜெயரத்னத்துக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்பது குறித்து ஆராயப்படுகிறது.

இணையம்வழி பொய்ச்செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று பிப்ரவரி 22ஆம் தேதியன்று சிஎன்ஏயிடம் சட்ட அமைச்சும் தொடர்பு தகவல் அமைச்சும் தெரிவித்தன.

ரிடவுட் சாலையில் உள்ள அந்த பங்களா வீடுகள் வாடகைக்கு விடப்பட்டது தொடர்பான கருத்துகளைத் திருத்தும்படி திரு கென்னத் ஜெயரத்னத்துக்கு எதிராகக் கடந்த வாரம் ஆறாவது முறையாக ‘பொஃப்மா’ சட்டத்தின்கீழ் உத்தரவிடப்பட்டது.

வீடுகளை வாடகைக்கு எடுத்த உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரிடமிருந்து சிங்கப்பூர் நில ஆணையம் குறைவான வாடகை வசூலித்ததாகவும் அவர்களுக்குச் சாதகமான வாடகை நிபந்தனைகளை வழங்கியதாகவும் திரு கென்னத் ஜெயரத்னம் தெரிவித்திருந்தார்.

திரு கென்னத் ஜெயரத்னத்திடம் உண்மைத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டும் அவர் தொடர்ந்து பொய்ச்செய்திகளைப் பரப்புவதாக சட்ட அமைச்சும் தொடர்பு, தகவல் அமைச்சும் கூறின.

எனவே, இதை அவர் வேண்டுமென்றே செய்வதாக சந்தேகம் ஏற்படுகிறது என்று அவை தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்