ஈராண்டுகளாக மாற்றான் தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பதின்ம வயதுப் பெண் ஒருவர் சட்ட நிறுவனம் ஒன்றின் இணையத்தளத்தில் உதவிநாடிய விவரம் தெரிய வந்துள்ளது.
பாலியல் துன்புறுத்தலைத் தடுத்து நிறுத்த எடுக்கப்பட்ட இதர முயற்சிகள் பலனளிக்காததால் அச்சிறுமி அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டார்.
தமது படுக்கையறையைத் தாழிட்ட பின்னரும் தமது அண்ணன் தடுக்க முயன்ற பின்னரும் மாற்றான் தந்தையின் பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த இயலவில்லை.
காவல்துறையின் உதவியை நாட பயமாக உள்ளது என்றும் பாலியல் துன்புறுத்தல் காரணமாக எழுந்த பயம் தற்கொலை பற்றி சிந்திக்கத் தூண்டியதாகவும் அந்தச் சிறுமி சட்ட நிறுவனத்தின் இணையத்தளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதனை அறிந்ததும் அந்நிறுவனத்தின் இயக்குநர், சிறுமியின் சார்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கில் திங்கட்கிழமை (பிப்ரவரி 19) உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றத்தில் ஈடுபட்ட 37 வயது மாற்றான் தந்தைக்கு 14 ஆண்டு சிறைத் தண்டனையும் 20 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தற்போது 16 வயதாகும் சிறுமி, 11 அல்லது 12 வயதாக இருந்தது முதல் மாற்றான் தந்தையின் பாலியல் துன்புறுத்தல் நீடித்து வந்ததாக உயர் நீதிமன்ற நீதிபதி அய்டிட் அப்துல்லா தெரிவித்தார்.


