உலக அளவில் பல நிலையற்ற சூழ்நிலை நிலவினாலும், கடல்நாக ஆண்டில் சிஙகப்பூரின் பொருளியல் கடந்த ஆண்டைக் காட்டிலும் சிறப்பாக செய்யும் என்பதற்கான நேர்மறையான அறிகுறிகள் தென்படுகின்றன என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
கட்டுமானம், சில்லறை விற்பனை, உணவு, பானத்துறை ஆகியவற்றின் வளர்ச்சி பிரகாசமாக உள்ள நிலையில் பல கட்டுமானத் திட்டங்கள் அடுத்தடுத்து நடைபெறவிருக்கின்றன. மேலும் சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே இன்னும் அதிகமான விமானச் சேவைகளும் விசாயில்லா பயணமும் பொருளியல் வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும் என்றும் திரு லீ பிப்ரவரி 9ஆம் தேதி கூறினார்.
இங் டெங் ஃபோங் மருத்துவமனைக்கு பிப்ரவரி 9ஆம் தேதி வருகையளித்த பிரதமர், செய்தியாளர்களிடம் பேசும்போது, பொருளியல் மீட்சி காணக்கூடும் என்றார்.
“2023ல் பொருளியல் வளர்ச்சி நாம் விரும்பியது போல் இல்லை என்றாலும், அது ஒரு நிலையான ஆண்டாக அமைந்ததால், நாம் பொருளியல் மந்தநிலையைத் தவிர்த்துவிட்டோம். இந்த 2024 ஆண்டில், 2023ஆம் ஆண்டைவிட சிறப்பாக செய்வோம் என்ற நம்பிக்கை உண்டு,” என்றார் திரு லீ.
2023ல் ஒட்டுமொத்த பொருளியல் 1.2 விழுக்காடு வளர்ச்சி கண்டது. கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டின் வளர்ச்சி 2.8 விழுக்காட்டுக்கு நல்ல வளர்ச்சி கண்டது. ஒப்புநோக்க மூன்றாம் காலாண்டின் வளர்ச்சி 1.1 விழுக்காடுதான்.
2024ன் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சி 1லிருந்து 3 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உலகளாவிய சூழல்களின் நிலையற்றத்தன்மையைப் பொறுத்தும் பொருளியல் வளர்ச்சியின் நிலைப்பாடு அமைந்திருக்கும் என்றார் அவர்.
“இந்த ஆண்டு எப்படி முடியும் என்று திட்டவட்டமாகக் கூற முடியாது. இப்போதைக்கு, அது கடந்த ஆண்டைக் காட்டிலும் வலுவாக இருக்கும் என்பதற்கான அறிகுறி உள்ளது,” என்று கூறிய பிரதமர், சிங்கப்பூரர்கள், நிறுவனங்கள், அரசாங்கம் என்ற கண்ணோட்டத்தில் நாம் அது குறித்து மகிழ்ச்சியடையலாம்,” என்றார்.
பணவீக்கம் பற்றியும் உயர்வான வாழ்க்கைத் தரம் பற்றியும் கருத்துரைத்த பிரதமர், கடந்த ஆண்டில் அது 2022ஐ காட்டிலும் குறைந்து இப்போது 4லிருந்து 5 விழுக்காடு வரை உள்ளது. 2024ல் அது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தொடர்புடைய செய்திகள்
பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிட்ட தனது சீனப் புத்தாண்டுச் செய்தியில், சிங்கப்பூரர்கள் தாமதிக்காமல் அதிகமான குழ்ந்தைகளைப் பெற்றுக்கொள்ள முயல வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதற்காக திருமணம் செய்துகொள்வதற்கும் பெற்றோராகுதலுக்கும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றார்.
“ஆதரவளிக்கும் திட்டங்கள் பற்றி துணைப் பிரதமரும் அவரது குழுவினரும் கடுமையாக பணியாற்றி வருகின்றனர். அவரது யோசனைகள் பற்றி நாங்களும் விவாதித்தோம். மகிழ்ச்சி தரும் செய்திகளை துணைப் பிரதமரே அறிவிப்பார்,” என்று தெரிவித்த பிரதமர் லீ, இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களைச் சந்தித்து சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அவர்களுடன் கொண்டாடினார்.
பிரதமருடன், அவரது துணைவியார் ஹோ சிங், என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், தொழிலாளர் இயக்கத்தின் இதர தலைவர்கள் ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.
பிரதமர் என்ற முறையில் இதுவே ஊழியர்களுடன் தாம் கொண்டாடும் கடைசி சீனப் புத்தாண்டு சந்திப்பு என்று கூறிய திரு லீ, எல்லாம் திட்டமிடப்படி நடந்தால், 2024 நவம்பர் மாதத்துக்குள் பிரதமர் பொறுப்பை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்கவிருப்பதாகக் கூறினார்.
பிரதமர் ஆவதற்கு முன்பே தாம் இம்மாதிரியான வருகைகளை அடிக்கடி செய்திருப்பதாகவும், விழாக்காலங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு நன்றி கூறுவதை தாம் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்ததாகவும் பிரதமர் லீ தெரிவித்தார்.

