பூஞ்சை பிரச்சினை அதிகரிப்பு

பூஞ்சை பிரச்சினை அதிகரிப்பு

3 mins read
0323dccf-2da4-4eb8-8706-c379ce94f803
சிங்கப்பூரின் 82% சராசரி ஈரப்பதம், பூஞ்சை செழித்து வளர உகந்த சூழலை உருவாக்குகிறது. - படம்: மவுல்ட் மெடிக்
Google News Preferred Icon

இந்த மழைக்காலத்தில் வீடுகளில் பூஞ்சைப் பிரச்சினை அதிகரித்துள்ளது. அடிக்கடி கடுமையான மழை பெய்ததால், ஈரப்பதம் அதிகரித்து பூஞ்சை பிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த 2023 டிசம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பூஞ்சை பிரச்சினை குறித்து தங்களை அணுகுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பூஞ்சை அகற்றும் மூன்று நிறுவனங்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறின.

டிசம்பர் மாத முதல் வாரத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஈகோசென்ஸ் நிறுவனத்திடம் விசாரிப்போர் எண்ணிக்கை 40 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அதன் இயக்குநர் தாமஸ் லூ, 38, தெரிவித்தார்.

மோல்ட்கோ நிறுவனத்தில் டிசம்பர் மாத தொடக்கத்துடன் ஒப்பிடும்போது ஏறக்குறைய 47 விழுக்காடு உயர்ந்துள்ளதாக அதன் விற்பனை மேலாளரும் பூஞ்சை பரிசோதனையாளருமான 56 வயது ஆண்ட்ரூ மேன்டல் கூறினார்.

டிசம்பர் மாத தொடக்கத்துடன் ஒப்பிடும்போது சேவை குறித்த விசாரணை 10 மடங்கு கூடியுள்ளதாக மோல்ட் மெடிக்கின் உரிமையாளரான 39 வயதான திரு ஜேம்ஸ் சுவா கூறினார். 2023 நவம்பரில் 35 ஆக இருந்த சம்பவங்களின் எண்ணிக்கை ஜனவரியில் 97 ஆக அதிகரித்துள்ளது என்றார் அவர்.

மழை இல்லாது இருந்தாலும், சிங்கப்பூர் பூஞ்சை வளர்ச்சிக்கு ஏற்ற நிலைமைகளைக் கொண்டுள்ளது.

பூஞ்சை வளர 60 விழுக்காட்டிற்கும் மேலான ஒப்பு ஈரப்பதம் தேவை என்று திரு சுவா கூறினார். சிங்கப்பூரின் சராசரி 82 விழுக்காடு ஒப்பு ஈரப்பதம் பூஞ்சை செழித்து வளர உகந்ததாக உள்ளது.

நீண்ட காலம் மழை பெய்யும்போது ஒப்பு ஈரப்பதம் 100 விழுக்காடாகிறது. அதாவது காற்று முழுமையாக ஈரப்பதத்தைக் கொண்டிருக்கிறது.

சம்பவங்களின் தீவிரமும் அதிகரித்துள்ளது. குளியலறை கூரைகளில் மட்டுமே இருந் பூஞ்சை இப்போது படுக்கையறைகள், வரவேற்பறை, நடைபாதை வரை விரிவடைந்துள்ளது என்று திரு மேன்டல் கூறினார்.

“பூஞ்சை ஒவ்வொரு 12 முதல் 24 மணி நேரத்திற்குள், தன்னைப் போன்ற இன்னொரு அணுவை உருவாக்கும். பெரிய பூஞ்சைகளை வீடுகளிலும் பணியிடங்களிலும் பார்க்கிறோம்,” என்று திரு அவர் கூறினார்.

பூஞ்சையினால் பெரும்பாலானோருக்கு பாதிப்பில்லாத ஒவ்வாமை ஏற்படுகிறது.

ஆனால், அது தோல் அரிப்பு, மூக்கடைப்பு, சளி, ஆஸ்துமா நோய் போன்ற ஒவ்வாமை பிரச்சினைகளைத் தூண்டக்கூடும் என்று நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக உயிரியல் அறிவியல் பள்ளியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் டாக்டர் லோ ஜியா டோங், 35, கூறினார்.

குழந்தைகளும் வயதானவர்களும் பூஞ்சையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகளின் நோயெதிர்ப்பு ஆற்றல் வளர்ச்சியடையாமல் இருப்பதால், பூஞ்சையினால் அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் சாத்தியம் அதிகமாகிறது.

வயதானவர்கள் மிகவும் மோசமான ஆஸ்துமா பாதிப்பு போன்ற கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என்று டாக்டர் லோ கூறினார்.

மழையினால் பூஞ்சைப் பிரச்சினை அதிகரித்திருப்பதாக வல்லுநர்கள் கூறினர்.


படம்: மவுல்ட் மெடிக்
மழையினால் பூஞ்சைப் பிரச்சினை அதிகரித்திருப்பதாக வல்லுநர்கள் கூறினர். படம்: மவுல்ட் மெடிக் -

பூஞ்சையைத் தவிர்க்க

ஈரப்பதத்தை அகற்றும் கருவியை தினமும் இயக்க வேண்டும் என்று திரு மேன்டல் கூறினார்.

ஒவ்வொரு நாளும் மூடப்பட்ட அறையில் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் மின்சார ஈரப்பதம் அகற்றும் கருவிகளை இயக்க வேண்டும் என்றார் அவர்.

சூரிய ஒளி பட விடுவது பூஞ்சையை அகற்றும் மற்றொரு வழி. புறஊதாக் கதிர்கள், பூஞ்சை போன்ற காற்றில் பரவும் நோய்க்கிருமிகளை அகற்ற முடியும் என்று திரு லூ கூறினார்.

வீடுகளை, குறிப்பாக குளியலறை, சமையலறை போன்ற பகுதிகளை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். காற்றோட்டம் பூஞ்சைகளைத் தடுக்க உதவும்.

வெளியில் செல்லும்போது காற்றாடியைச் சுற்ற விட்டுச் செல்லலாம். அசையாத காற்றில் பூஞ்சை வளரும்.

அலமாரிகளில் ஈரப்பதத்தை உறிஞ்சும் பொருள்களை வைக்கும் படியும் சுத்தம் செய்யும் போது பூஞ்சை அகற்றும் பொருள்களால் மர அறைகலன் துடைக்கும்படியும் திரு மேண்டல் அறிவுறுத்தினார்.

பூஞ்சையை அகற்ற வெள்ளை வினிகர் பிரபலமானது. எனினும், மிகவும் குறைவாக இருக்கும் அசிடிக் அமில அளவைக் கொண்ட வினிகர் பயனற்றது, குறிப்பாக அது தண்ணீருடன் நீர்த்துப் போகும்போது என்று திரு மேன்டல் குறிப்பிட்டார்.

பூஞ்சை அதிகமாகவோ அல்லது கூரைகள் போன்ற பகுதிகளை அடைவதற்கு கடினமானதாகவோ இருக்கும் நிலையில், பூஞ்சை அகற்றும் நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு திரு சுவா கூறினார்.

பூஞ்சையை அகற்ற வல்லுநர்கள் வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
பூஞ்சைபூஞ்சணம்ஈரப்பதம்சிங்கப்பூர்மழைபாதிப்பு