ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

2 mins read
dcae9b90-c12a-4fb3-ad89-c18f92ce8cc8
ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. - படம்: ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி
Google News Preferred Icon

பொங்கல் விழா. தமிழர்களின் மரபு சார்ந்த பெரும் விழா. தமக்கு உதவிய இயற்கைக்கும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் ஒரு மகத்தான விழா.

இவ்விழா ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளியில் ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமையன்று பள்ளியரங்கத்தில் பிற இன ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் இணைந்து மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

பொங்கல் விழாவைக் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகிய ஆசிரியர்களும் மாணவர்களும் முதல் நாள் 13.01.2024 சனிக்கிழமையன்றே பள்ளி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள அனைத்துத் தூண்களிலும் கரும்புகளைக் கட்டித் தோரணங்களையும் தொங்கவிட்டார்கள். பள்ளி அலுவலக வாசலுக்கு முன்பாக வண்ணப் பொடிகளைக் கொண்டு கோலமிட்டனர்.

பள்ளியரங்கத்தில் கரும்புகள் கட்டி அலங்கரித்தனர். மேலும், நன்னாளாம் பொங்கல் விழாவைப் பற்றிய செய்திகளையும் அவ்விழாவை ஏன் நான்கு நாள் கொண்டாடுகிறோம் என்பன பற்றிய செய்திகளையும் தகுந்த புகைப்படங்களோடு படவில்லைகளாகத் தயாரித்தார்கள். பள்ளி முதல்வர் செல்வி டான், இரண்டாம் ஆண்டாக இவ்விழாவைக் கொண்டாடுவதால் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார்.

ஜனவரி 15ஆம் தேதி திங்கட்கிழமையன்று காலையிலேயே பள்ளியரங்கத்தில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கூடியிருந்தனர். பள்ளி முதல்வர் செல்வி டான் தமிழர்கள் அணியும் முறையில் புத்தாடையை அணிந்து புத்துணர்ச்சியோடு தோற்றமளித்தார்.

காலையில் கொடிவணக்கம் மற்றும் உறுதிமொழியேற்பு முடிந்தவுடன் 7.35 மணிக்கு மாணவிகளின் பொங்கல் பற்றி அறிமுக உரையுடன் பொங்கல் விழா ஆரம்பமாகியது. இஞ்சிக்கொத்தும் மஞ்சள்கொத்தும் சேர்த்துக் கட்டிய பொங்கல் பானை முன்பு குத்துவிளக்கு வைக்கப்பட்டிருந்தது.

அதில் பள்ளி முதல்வர், பள்ளியின் துணை முதல்வர்களான திருமதி இயோ, திருவாட்டி செரினா இருவரும் இணைந்து குத்துவிளக்கை ஏற்றி வைத்தனர். அப்போது பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து ‘பொங்கலோ! பொங்கல்’ ‘பொங்கலோ! பொங்கல்’ என்று கூவினர்.

பள்ளி முதல்வர் சீன இனத்தவராக இருந்தாலும். தமிழர்களின் மரபு சார்ந்த உடையை அணிந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என்று கூவியவாறே பொங்கலை மிக மகிழ்ச்சியாகக் கொண்டாடினார். பள்ளி மாணவிகள் பொங்கலைப் பற்றிய பாடல்களுக்கு அழகிய நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.

மறுநாள் 16.01.2024 செவ்வாய்க்கிழமை மதியம் மூன்று மணிக்கு உயர்நிலை ஒன்றாம் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த ‘பொங்கல் விழா’ கற்றல் பயணத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இங்கு சிங்கப்பூரில் உள்ள மற்ற உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் கலந்துகொண்டனர். பொங்கல் விழா கொண்டாட்டங்களைப் பார்த்து மகிழ்ந்ததோடு அங்கு நடந்த பொங்கல் விழா சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளிலும் கலந்துகொண்டு மூன்றாம் பரிசை வென்றனர்.

செய்தி: ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளி

குறிப்புச் சொற்கள்