இசையுடன் சொல்லப்பட்ட சாதாரண மனிதர்களின் கதை

இசையுடன் சொல்லப்பட்ட சாதாரண மனிதர்களின் கதை

2 mins read
e131fe8d-581d-44b9-8d03-01503cbd1afe
(இடமிருந்து) தாள வாத்தியக் கலைஞர் முரளிதரன், எழுத்தாளரும் கதை சொல்லியுமான அஷ்வாணி அஷ்வத், இசையமைப்பாளரும் புல்லாங்குழல் கலைஞருமான நிரஞ்சன் பாண்டியன். - படம்: கலைகள் மன்றம்
Google News Preferred Icon

சிங்கப்பூர் எழுத்தாளார் திருவிழா 2023 இன் ஒரு பகுதியாக, அன்றாட மக்கள் எதிர்கொள்ளும் அமைதியான போராட்டங்கள் குறித்த கதைகளை, மெல்லிசையுடன் கோத்து, உணர்ச்சிபூர்வமான படைப்பை அரங்கேற்றினர் ‘பிரம்மாஸ்திரா’ குழுவினர்.

இசையமைப்பாளரும் புல்லாங்குழல் கலைஞருமான நிரஞ்சன் பாண்டியன், 30, தலைமையில் தாள வாத்தியக் கலைஞர் முரளிதரன், இருமொழி எழுத்தாளரும் கதைசொல்லியுமான அஷ்வாணி அஷ்வத் இணைந்து, இதற்குத் தானே ஆசைப்பட்டாய், மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு - என இரு கதைகளை தமிழிலும் ஹேர்வோலூஷன், ஸ்பிரிட் டவுன், கார்ல் வித் ய கே ஆகிய மூன்று கதைகளை ஆங்கிலத்திலும் படைத்தனர்.

நவம்பர் 25 ஆம் நாள் கலைகள் மன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய பணிப்பெண்ணின் சிறு ஆசைகள், அவை நிறைவேறாமல் போனால் ஏற்படும் உணர்வுகள், வயதான ஒரு பெண்மணியின் ஏக்கங்கள், சிறு மீன்களின் உணர்வுகள், ஒரு பெண்ணுக்கும் கூந்தலுக்குமான தொடர்பு என நுணுக்கமான களங்களைக் கொண்ட கதைகளை வழங்கினார் நிகழ்த்துக்கலை ஆசிரியரான அஷ்வாணி அஷ்வத், 32.

அன்றாட வாழ்வில் நாம் கடந்து போகும் சாதாரண மனிதர்களின் கதையைச் சொல்லும் எண்ணத்தில் இவை படைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார் இக்கக்கதைகளை எழுதிய அஷ்வாணி. தனது சுற்றுப்புறத்தைக் கவனித்து, கதாபாத்திரங்களை வடிவமைத்து, இக்கதைகளை எழுத ஒன்றிரண்டு மாத காலம் ஆனதாகச் சொல்கிறார் இவர்.

பாரதியார் கவிதைகளை இசையாக்கி வழங்கிய ‘வசனக் கவிதைகள்’, கதைப் படைப்பு என பல படைப்புகளை வழங்கியுள்ளனர் இக்குழுவினர்.

“மனித அனுபவங்களை மனதை மயக்கும் இசையுடன் கலந்து வழங்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட இப்படைப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது பெருமை,” என்றார் நிரஞ்சன்.

கதை சொல்லப்படும்பொழுது, அந்தக் கதையில் வரும் சூழல், இடங்கள், மனிதர்கள், அவர்களின் உணர்ச்சிகள் உள்ளிட்டவற்றை மக்களிடம் கடத்த உடன் பயணிக்கும் இசை உதவுகிறது என்கிறார் அவர்.

“சொல்லப்படும் கதையை மேம்படுத்தும் இசையை வடிவமைப்பதோடு, ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து மேடையிலும் மேம்படுத்துவோம்” என்றார் அவர்.

முரளிதரன், 34, கூறுகையில், “இசையும் ஒரு மொழிதான். ஒரு வாத்தியக் கருவிக்கும் இன்னொரு வாத்தியக் கருவிக்கும் ஒரு அழகிய உரையாடல் நடக்கும். எடுத்துக்காட்டாக, கதையின் உணர்வுக்கேற்ப புல்லாங்குழல் வாசிக்கப்படும்.

“அதனைக் கேட்ட பின், அதற்குப் பதில் அளிக்கும் விதமாகவோ அல்லது உடன்படும் விதமாகவோ தாள வாத்தியம் வாசிக்கப்படும். இந்தக் கோவை, பகிரப்படும் கதைக்கு மெருகூட்டும்,” என்றார்.

மேலும், “படைக்கப்படும் முன்பு ஒத்திகை பார்க்கப்பட்டாலும், மேடையில் அரங்கேற்றப்படும் பொழுது, அவரவர் உணர்விற்கேற்ப வாசிப்பதும் மேம்படுத்துவதும் என படைப்பு இன்னும் அழகாகிறது,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்