தமிழ் முரசின் மொழிச்சேவைக்கு தேசிய மரபுடைமைக் கழகம் அங்கீகாரம்

தமிழ் முரசின் மொழிச்சேவைக்கு தேசிய மரபுடைமைக் கழகம் அங்கீகாரம்

3 mins read
570d6ef6-aaec-4bda-8838-653da9c6b85c
தேசிய மரபுடைமைக் கழகத்தின் மரபுடைமைப் புரவலர் விருதை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்கிடமிருந்து தமிழ் முரசு இணை ஆசிரியர் வீ. பழனிச்சாமி, எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தின் சார்பில் பெறுகிறார். - படம்: தேசிய மரபுடைமைக் கழகம்
Google News Preferred Icon

கி.ஜனார்த்தனன்

கடந்த 2022ஆம் ஆண்டில் நடந்த தமிழ்மொழி விழாவையொட்டி ஒரு மாதத்திற்கு இளையர்களையும் தமிழையும் பற்றி தமிழ் முரசு நாள்தோறும் வெளியிட்ட குறுங்கட்டுரைகளுக்காக தேசிய மரபுடைமைக் கழகம், எஸ்பிஎச் மீடியா நிறுவனத்தைச் சிறப்பித்துள்ளது.

எஸ்பிஎச் நிறுவனத்துடன் மொத்தம் 64 தனிநபர் மரபுடைமை கொடைவள்ளல்கள் மற்றும் அமைப்புகளுக்கு மரபுடைமைக் கழகம், மரபுடைமைப் புரவலர் விருது வழங்கிச் சிறப்பித்தது. சன் யான் செட் நன்யாங் நினைவு மண்டபத்தில் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 9) நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் கலைநிகழ்ச்சி அங்கங்களுடன் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

வள்ளல்களும் அமைப்புகளும் வழங்கிய ரொக்கம், நினைவுப்பொருள்கள் மற்றும் இதர பொருள்களின் மதிப்பு இவ்வாண்டு 17.73 மில்லியன் வெள்ளியாக உள்ளது. இது, 2021ஆம் ஆண்டில் குவிந்த 1.66 மில்லியன் வெள்ளியைக் காட்டிலும் அதிகம்.

2022 தமிழ்மொழி விழா காலகட்டத்தில் நாள்தோறும் தமிழ் முரசின் முதல் பக்கத்தில் வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் தமிழ்ச்சொற்களின் விளக்கம் இடம்பெற்று வந்தது. அந்த விளக்கத்தின் கீழ் சிங்கப்பூரில் தமிழ்மொழியின் வளர்ச்சி, அதனால் தாங்கள் அடைந்த பலன்கள் ஆகியவை பற்றி இளையர்களின் கருத்துகளைக் தொகுத்து தமிழ் முரசு வழங்கியது. 

இந்தப் பங்களிப்புக்காக தேசிய மரபுடைமைக் கழகம், மரபுடைமைப் புரவலர் விருதை தமிழ் முரசு நாளிதழுக்கு வழங்கிச் சிறப்பித்தது என்றார் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங்கிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்ட தமிழ் முரசின் இணை ஆசிரியர் வீ. பழனிச்சாமி.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒளியேறிய காணொளி, தமிழ் முரசு நாளிதழின் நிறுவனரும் தமிழ்ச் சமூகத் தலைவருமான தமிழவேள் கோ. சாரங்கபாணியின் சிங்கப்பூர் குடியுரிமைக் கட்டளைச் சான்றிதழை அவருடைய மகள் திருவாட்டி ராஜம் சாரங்கபாணி இந்திய மரபுடைமை நிலையத்திற்குப் பல ஆண்டுகளுக்குமுன் நன்கொடை அளித்ததைப் பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தியது. 

விருது பெற்றோரில் ஒருவரான திரு பொன்னுசாமி காளஸ்திரி, சிட்டி மலாக்கா சமூகத்தைச் சேர்ந்த தம் குடும்பத்தின் புகைப்படங்களையும் சில ஆவணங்களையும் அண்மையில் மீண்டும் திறக்கப்பட்ட பெரனக்கான் அரும்பொருளகத்திற்கு வழங்கினார்.

“விருது பெற்றதில் பெருமை அடைகிறேன். இதன்மூலம் சிட்டி மலாக்கா சமூகத்தைப் பற்றிய விழிப்புணர்வு, இந்தியர்கள் உட்பட சிங்கப்பூரிலுள்ள அனைத்துச் சமூகத்தினரிடமும் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறேன்,” என்று பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் திரு பொன்னுசாமி, 76, கூறினார்.

தமிழ்மொழி விழா 2023க்கு நன்கொடை அளித்த யுவபாரதி அனைத்துலகப் பள்ளியுடன் ‘சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்’, ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’, ‘சுல்வாசு சிங்கப்பூர்’ உள்ளிட்ட அமைப்புகளும் நிறுவனங்களும் விருது பெற்றன.

கடந்தகால சிங்கப்பூர் நீரிணையைச் சார்ந்த சீனர்களின் 577 வெள்ளி மற்றும் சுட்டாங்கல்லால் செய்யப்பட்ட நினைவுப்பொருள்களை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய திருவாட்டி எல்லிஸ் டானும், 141, நீல் ரோட்டிலுள்ள மரபுடைமைக் கட்டடம் ஒன்றையும் அதனைப் புதுப்பிப்பதற்கு 2 மில்லியன் வெள்ளி நிதியையும் வழங்கிய பொர்ட்டபெல்லா குடும்பத்தினரும் விருது பெற்ற புரவலர்களில் அடங்குவர். 

இவ்வாண்டு விரிவுபடுத்தப்பட்ட நன்கொடைத் தரநிலைகளின்படி, மரபுடைமை மற்றும் கலாசாரச் சிறப்பு கொண்ட அசையாச் சொத்துகளையும் நன்கொடையாக வழங்கலாம்.

அத்துடன், அரும்பொருளகத்திற்கு மட்டுமின்றி, சமூக அமைப்புகளுக்கும் லாப நோக்கமற்ற ஆர்வலர் குழுக்களுக்குமான பங்களிப்புகளையும் புதுப்பிக்கப்பட்ட தரநிலைகள் அங்கீகரிக்கின்றன. 

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்