ஒரு சிறுமியின் வளர்ப்புத் தந்தை அந்தச் சிறுமிக்கு 10 வயதானபோது அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
அது தெரிந்தும் வேறு ஓர் ஆடவர் அந்தச் சிறுமிக்கு 13 வயது ஆனபோது அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
இரண்டு ஆடவர்களால் பாலியல் கொடுமைக்கு ஆளான அந்தச் சிறுமிக்கு உயிரோடு இருப்பதைவிட செத்துப் போய்விடலாம் என்ற எண்ணம்கூட ஏற்பட்டது.
தனக்குத் தானே பாதிப்புகளையும் அந்தச் சிறுமி ஏற்படுத்திக்கொண்டார்.
சிறுமியை இரண்டாவதாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 44 வயது ஆடவருக்கு வியாழக்கிழமை 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 10 பிரம்படிகள் கொடுக்கும்படியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவர் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதர நான்கு குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இவரின் பெயரை வெளியிட இயலாதபடி தடை உள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி சிறை, பிரம்படி தண்டனை பெற்ற ஆடவருடைய காதலியின் புதல்வியாவார்.
அந்தச் சிறுமியை அவருடைய வளர்ப்புத் தந்தை 2017க்கும் 2020க்கும் இடையில் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கினார். அவருக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

