ஆகாயத்தை அலங்கரித்த சாகசக்காட்சி

ஆகாயத்தை அலங்கரித்த சாகசக்காட்சி

1 mins read
துல்லியமான அசைவுகள், சிலிர்க்க வைத்த வித்தைகள் 
8077c6ed-8ebe-4efa-be0b-f72060a6f58f
தேசிய தின அணிவகுப்பின்போது சிங்கப்பூர் கொடியைப் பறக்கவிட்டபடி விண்ணில் பறந்த சினூக் ஹெலிகாப்டர்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2
Google News Preferred Icon

தேசிய தின அணிவகுப்பில் சிங்கப்பூர் ஆகாயப்படை நிகழ்த்திய சாகசக்காட்சி விண்ணை அலங்கரித்து, பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

இவ்வாண்டு 55 ஆண்டுகளை நிறைவுசெய்யும் சிங்கப்பூர் ஆகாயப்படையின் அற்புதமான வான்திறன் சாகசக்காட்சி புதன்கிழமை பாடாங்கில் அரங்கேறியது.

அணிவகுப்புச் சடங்கு அங்கத்தின் ஒரு பகுதியாக, இரு அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் புடைசூழ, தேசியக் கொடியை ஏந்திய சினூக் ஹெலிகாப்டர் பாடாங்குக்கு மேலே பறந்து சென்றது. பின்னணியில் தேசிய கீதம் ஒலித்தது.

அதனைத் தொடர்ந்து, ஐந்து எஃப்-16டி+ ரக போர் விமானங்களும், அவற்றுக்குப் பின்னால் மூன்று எஃப்-15எஸ்ஜி போர் விமானங்களும் அடுத்தடுத்து பறந்து வந்தன.

அதன்பின் அரங்கேறிய மூன்று நிமிட வான்திறன் சாகசக்காட்சியை ஆகாயப்படையின் ஆகப்பெரிய ஏ330 விமானம் வழிநடத்திச் சென்றது.

ஹெலிகாப்டர் சாகசக்காட்சியில் ஹெச்225எம் வகை ஹெலிகாப்டர் முதல்முறையாக அறிமுகமானது. அப்போது அங்கு பறந்துவந்த இரு எஃப்-15எஸ்ஜி போர் விமானங்களைக் கண்டதும் பார்வையாளர்களின் உற்சாகம் பெருகியது.

இரு போர் விமானங்களும் ஒத்திசைவுடன் துல்லியமாக நிறைவேற்றிய கூரசைவுகளைக் கண்டு பாடாங் முழுவதும் ஆனந்தக்கூச்சல் எழும்பியது. அந்த அசைவுகளைச் செய்ய புவிஈர்ப்பு ஆற்றலைவிட ஒன்பது மடங்கு அதிகமான சக்தியை விமானங்கள் தாக்குப்பிடிக்க வேண்டும்.

தேசிய தின அணிவகுப்பில் இதுவரை படைக்கப்படாத குறுக்குத் திருப்பத்துடன், செங்குத்தாக மேலேறிச்சென்று சாகசக்காட்சியை நிறைவுசெய்தது ஆகாயப்படை.

இந்த அங்கம் கண்களுக்கு மட்டுமன்றி, விமானங்கள் பறந்துசெல்லும் பேரொலியுடன் செவிக்கும் இனிய அனுபவமாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்