புதிய உத்தேச சட்டம் சிரமமானது; பேருந்து நிறுவனங்கள் கருத்து

புதிய உத்தேச சட்டம் சிரமமானது; பேருந்து நிறுவனங்கள் கருத்து

1 mins read
f1fcbce4-7580-42b4-8759-a20c025c9c81
நாடாளுமன்றம் சட்ட திருத்தத்தை நிறைவேற்றினால், தங்கள் வாகனங்கள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளைச் சென்றடைவதற்கு முன்னதாகவே பயணிகள் பற்றிய தகவல்களை ஆணையத்திடம் பேருந்து நிறுவனங்கள் தாக்கல் செய்யவேண்டி இருக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

பயணிகள் பற்றிய தகவல்களைக் குடிநுழைவு சோனைச்சாவடி ஆணையத்திடம் முன்னதாகவே தெரியப்படுத்தும் ஒரு திட்டத்தை நிறைவேற்றுவது சிரமம் என்றும் அதனால் தொழில் பாதிக்கும் என்றும் கடற்பாலத்தைக் கடந்து சேவையாற்றும் பேருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

அந்த உத்தேச சட்டம், குடிநுழைவு (திருத்த) மசோதாவின் ஒரு பகுதியாக நாடாளுமன்றத்தில் முதல்வாசிப்புக்கு புதன்கிழமை தாக்கலானது.

இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ அதைத் தாக்கல் செய்தார்.

அதை நாடாளுமன்றம் நிறைவேற்றினால், தங்கள் வாகனங்கள் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளைச் சென்றடைவதற்கு முன்னதாகவே பயணிகள் பற்றிய தகவல்களை ஆணையத்திடம் பேருந்து நிறுவனங்கள் தாக்கல் செய்யவேண்டி இருக்கும்.

பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் நபர்கள் போன்ற விரும்பத்தகாத பயணிகளை இந்தப் புதிய ஏற்பாட்டின் மூலம் தடுத்துவிடலாம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த மசோதாவில் வேறு ஓர் திட்டமும் உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

‘பேருந்தில் ஏற தடை உத்தரவு’ என்பது அந்தத் திட்டம். இது நிறைவேறினால் விரும்பத்தகாத பயணிகளைப் பேருந்தில் ஏற்றிக்கொள்ளக்கூடாது என்று தடைவிதிக்கும் உத்தரவை பேருந்து நிறுவனங்களுக்கு ஆணையம் பிறப்பிக்கக் கூடும். சட்டத்தை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படலாம்.

விமான நிறுவனங்கள், கப்பல் நிறுவனங்களிடம் இருந்து பயணிகள் பற்றிய தகவல்களை முன்னதாகவே குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம் இப்போது பெற்று வருகிறது.

ஆனால் போக்குவரத்து நிறுவனங்கள் அனைத்திற்குமே இந்த ஏற்பாடு புதிதான ஒன்றாகும்.

குறிப்புச் சொற்கள்
கடற்பாலம்