மின்னிலக்கக் கல்விக்குக் கூடுதல் ஆதரவளிக்க புதிய கருவிகள், திட்டங்கள்

மின்னிலக்கக் கல்விக்குக் கூடுதல் ஆதரவளிக்க புதிய கருவிகள், திட்டங்கள்

2 mins read
9944ecdc-fee4-4682-ba9d-cb09cd2e5bc8
கல்வியாளர்கள் பயன்படுத்தக்கூடிய மைக்ரோசாஃப்ட் மின்னிலக்கக் கருவிகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் கற்றல் கருவிகளும் உள்ளடங்கும்.  - படம்: சாவ் பாவ்
Google News Preferred Icon

சரியான மின்னிலக்கக் கருவிகளுடன் அதிக பயன்மிக்க முறையில் கற்பிக்க விரும்பும் கல்வியாளர்களின் முயற்சிக்குத் துணைபுரிய புதிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கல்விக் கழகங்களைச் சேர்ந்த கல்வியாளர்களுக்கான மின்னிலக்க பெரியவர்களுக்கான கல்வி வரைவுத்திட்டம், வியாழக்கிழமை ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில் வெளியிடப்பட்டது. பெரியோர் கல்விக்கான பரிந்துரைகளையும் உத்திகளையும் இத்திட்டம் கல்வியாளர்களுக்கு வழங்கும்.

கற்றலின் குறிப்பிட்ட இலக்குகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட மின்னிலக்கக் கருவிகளை வழங்கும் இத்திட்டத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் சேர்ந்து சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் தயாரித்தது.

கல்வியாளர்கள் பயன்படுத்தக்கூடிய மைக்ரோசாஃப்ட் மின்னிலக்கக் கருவிகளில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் கற்றல் கருவிகளும் உள்ளடங்கும்.

பெரியோர் கல்வித்துறையைச் சேர்ந்த கல்வியாளர்கள் மின்னிலக்கக் கருவிகளைப் பயன்படுத்த ஆதரவளிப்பதன்வழி, திறன் பயிற்சியின் தரத்தையும் பயனையும் வரைவுத்திட்டம் மேம்படுத்தும். இந்த வரைவுத்திட்டம், சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் இலவசமாகக் கிடைக்கும்.

யூனோசில் உள்ள வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடைபெற்ற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் விழாவில் அறிமுகமான பல்வேறு தொடர் கல்வி, பயிற்சித் திட்டங்களில் இந்த வரைவுத்திட்டமும் ஒன்று.

உயர்கல்விக் கழகங்களின் ஆதரவுடன், சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்புடன் கூட்டிணைந்து ஏற்பாடு செய்த “SkillsFuture Festival X SUSS” விழா, வேலையிடத்தில் மின்னிலக்கமயமாகும் முயற்சிக்கு ஆதரவளிக்கிறது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கல்வி, மனிதவளத் துணை அமைச்சர் கான் சியோ ஹுவாங், “கல்வித் தொழில்நுட்பத்தைத் தரமான பெரியோர் கல்வியுடன் இணைத்துப் பயன்படுத்தும்போது, கற்பவர்களுக்குக் கிடைக்கும் ஒட்டுமொத்த அனுபவமும் நன்மையும் மேம்படும்,” என்று கூறினார்.

“கற்பவர்கள் தங்களது சொந்த வேகத்தில் கற்றுக்கொள்ளும் வகையில் தொடர் கல்வி, பயிற்சித் திட்டங்களில் காலவரையற்ற கற்றலை அதிகமாக உள்ளடக்குவதற்கான வழிகளை உயர்கல்விக் கழகங்கள் ஆராய்கின்றன.

“நேரடியாகச் சந்திக்கும் மதிப்புமிக்க நேரத்தை வகுப்பறைக்கும் முக்கிய திறன்களின் நடைமுறைப் பயிற்சிக்கும் பயன்படுத்த இது துணைபுரியும்,” என்றார் அவர்.

பணியிடைக்காலத்தில் உள்ளவர்களுக்கான புதிய மின்னிலக்கப் பயிற்சி வகுப்புகளும் விழாவில் இடம்பெற்றன.

மின்னிலக்கப் பொருளியல் துறை நடைமுறை வல்லுநர் பயிற்சித்திட்டம் அதில் ஒன்று.

ஸ்கில்ஸ்ஃபியூச்சர் அமைப்பின் ஆதரவுடன் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் தொடங்கியுள்ள இத்திட்டம், பணியிடைக்கால ஊழியர்களின் மின்னிலக்கத் திறன்களை மேம்படுத்த ஆதரவளிக்கும்.

இதற்கான பதிவு வியாழக்கிழமை தொடங்கியது. முதல் வகுப்பு 2024 ஜனவரி மாதம் தொடங்கும்.

“வேலையிடத்திலும் பொழுதுபோக்குகளிலும் நாம் செயல்படும் விதத்தை மின்னிலக்கமயம் மாற்றிவிட்டது. துரித மாற்றமடையும் இன்றைய சூழலில், வேலைப் பொறுப்புகள்மீது பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது,” என்று சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் டான் டாய் யோங் கூறினார்.

“வேலைச் சந்தையில் நிலைத்திருக்க, ஊழியர்கள் தேவையான திறன்களையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்ளவேண்டும்.

“மின்னிலக்கமயத்தை நேர்மறையான முறையில் பயன்படுத்துவது அவசியம். ஏனெனில், சிங்கப்பூரிலுள்ள தொழில்நிறுவனங்களுக்கு அதுவே புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் உருவாக்குகிறது. மின்னிலக்க யுகத்தில் வெற்றியடைய நாம் காலத்திற்கு ஏற்ப விரைவாகச் செயல்படவேண்டும்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்