சிங்கப்பூரின் மிகப் பெரிய மோசடி: 62 பேர் பாதிப்பு

சிங்கப்பூரின் மிகப் பெரிய மோசடி: 62 பேர் பாதிப்பு

3 mins read
59f9df7d-7875-4810-ac7c-ccc599e73ccb
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள் உட்பட 62 பேர், இதுவரை இடம்பெற்ற ஆகப் பெரிய மோசடியில் சிக்கியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கல்விப் பரிமாற்றத் திட்டத்தில் சிங்கப்பூர் வந்த பிரஞ்சு மாணவர் ஒருவர், ஏர்பிஎன்பி இணையத் தளத்தில் வாடகை வீடுகள் பற்றி பார்த்த பிறகு கிப்சன் ஸெங் ஸியான்ஃபுவைத் தொடர்புகொண்டார்.

2022ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதிக்கும் 13ஆம் தேதிக்கும் இடையே அந்த மாணவர் ஒரு வாடகை வீட்டை உறுதிசெய்ய 29 வயது ஸெங்குக்கு $9,000 கொடுத்தார். ஆனால், வீட்டுக்குக் குடிபோவதற்கு முன் அந்த வீடு கிடைக்கவில்லை என்றும் மாணவர் கொடுத்த பணம் திருப்பித் தரப்படும் என்றும் ஸெங் காரணம் சொன்னார். அதன் பின்னர் அந்த மாணவர் தங்குவதற்கு மற்றோர் இடத்தைத் தேடி அலைந்தார். கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை.

குறைந்தது 12 நாடுகளைச் சேர்ந்த 62 பேர் இந்த மோசடியில் சிக்கினர். அவர்களில் சிங்கப்பூரர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்கள் மொத்தமாக $383,000 பணத்தை ஸெங்கிடம் பறிகொடுத்தனர் என்று அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.

தம் மீது சுமத்தப்பட்ட 23 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளை ஸெங் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டார். மேலும் 39 குற்றச்சாட்டுகள் தண்டனை விதிப்பின்போது கருத்தில் கொள்ளப்பட்டன.

2018க்கும் 2020க்கும் இடைப்பட்ட காலத்தில், வாடகை வீடுகளைத் தேடித் தரும் நிறுவனமான சிங்கப்பூர் ஹவுசிங் கம்பெனி எனும் நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக ஸெங் வேலை செய்தார். வாடகைக்கு உள்ள வீடுகளை புகைப்படமாக எடுத்து அவற்றை இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து அவற்றைப் பார்த்து விசாரிக்கும் வாடிக்கையாளர்களை அழைத்துச் சென்று வீடுகளைக் காண்பிப்பது ஸெங்கின் வேலை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் வோங் ஷியாவ் யின் தெரிவித்தார்.

அந்த வேலையிலிருந்து விலகிய பிறகு, ஸெங் அந்த வீட்டுப் படங்களை ஏர்பிஎன்பி இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்து சட்டத்துக்குப் புறம்பாக விளம்பரம் செய்தார். போலி விளம்பரத்தைப் பார்த்து அவரை அழைப்பவர்களுக்கு போலி வீட்டுப் பத்திரங்களையும் ஸெங் தயாரித்தார்.

இந்தக் குற்றத்துக்காக முதல் முறையாக 2022, பிப்ரவரி 10ஆம் தேதி கைதான பிறகும் பிணையில் இருமுறை வெளியே வந்த பிறகும் ஸெங் தொடர்ந்து இக்குற்றங்களைப் புரிந்து வந்தார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஜெர்மன் ஆடவர். மற்றொருவர் சிங்கப்பூருக்கு மேற்கல்வி கற்க வந்த ஜெர்மன் பெண்மணி.

அவர்களிடம் ஸெங் $7,000, முன்பணம் கேட்டார். அதை அவர்கள் 2022, பிப்ரவரி 15ஆம் தேதி கொடுத்தனர். போலியான வீட்டுப் பத்திரத்தில் அவர்கள் இருவரும் கையெழுத்திட்டனர்.

வீட்டுக்குக் குடிபோவதற்கு ஒருநாளுக்கு முன்பு அந்த வீடு கிடைக்கவில்லை என்றும் வீட்டை விட்டு வெளியேறுபவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர்களின் முன்பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் பொய்யுரைத்தார்.

பாதிக்கப்பட்டவர் கொடுக்கப்பட்ட முன்பணத்திலிருந்து ஒரு வார வாடகைப் பணத்தைத் திரும்ப கேட்டார். அதை அவ்வாறு திருப்பிக் கொடுத்த ஸெங், அதன் பிறகு புதிய வாடகை வீட்டைத் தேடித் தரவில்லை. எஞ்சிய பணத்தையும் தரவில்லை என்று விவரித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், பின்னர் பாதிக்கப்பட்டவர் மற்றொரு வாடகை வீட்டைத் தேடும் நிர்பந்தத்துக்கு ஆளானார்.

அடுத்த நாள் வாடகை வீட்டில் குடியேற, 2022, மே 11ஆம் தேதியன்று ஸெங்கிடம் $7,000 கொடுத்து, வீட்டுப் பத்திரத்தில் கையெழுத்திட்டார்.

வீடு குடிபோகும் தினத்தில் அங்கு சென்று பார்த்தபோது அந்த வீட்டில் மற்றவர்கள் குடியிருந்தது தெரிய வந்தது.

குழப்பமடைந்த பாதிக்கப்பட்டவர், அங்கு குடியிருந்தவர்களின் வீட்டு முகவரைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த முகவர் இதுபோன்று நடப்பது இது முதல் முறையல்ல என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் ஸெங்கைத் தொடர்புகொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

“வாடகை வீடுகளுக்கான போட்டித்தன்மை உச்சத்தில் இருந்தபோது ஸெங் இந்தக் குற்றங்களைப் புரிந்துள்ளார்,” என்று வழக்கறிஞர் திருவாட்டி வோங் கூறினார்.

தண்டனை விதிப்புக்காக ஸெங் ஜூலை 26ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்