சூதாட்ட நிலையக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிக்கு 750க்கு மேற்பட்ட அச்சு மைநிரப்புகலன்களை முறைகேடாக இணையம் வழியாக விற்பனை செய்ததன் தொடர்பில் ஈராண்டுகள், ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆணையத்துக்குச் சொந்தமான அவற்றின் மொத்த மதிப்பு $93,000. ஸுல்கிஃப்லி யாக்கோப் எனும் 45 வயது ஆடவர், நம்பிக்கை மோசடி தொடர்பில் சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கும்போது மூன்றாவது குற்றச்சாட்டும் கருத்தில் கொள்ளப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.
ஸுல்கிஃப்லி 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்கும் 2018 அக்டோபர் 30ஆம் தேதிக்கும் இடையே தேவைக்கு அதிகமான அச்சு மைநிரப்புகலன்களை வாங்கினார். கூடுதலானவற்றை விற்று அந்தத் தொகையைத் தான் எடுத்துக்கொள்ள அவர் திட்டமிட்டார். கேரசல் இணைய வர்த்தகத் தளத்தின்மூலம் விற்றார்.
ஆணையம் இதனைக் கண்டறிந்து காவல்துறையிடம் புகாரளித்தது. 2020ஆம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி ஸுல்கிஃப்லி கைது செய்யப்பட்டார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், இவ்வாண்டு ஜனவரியில் $25,000ஐத் திருப்பிச் செலுத்தியதாகக் கூறப்பட்டது.
இம்மாதம் 28ஆம் தேதி அவர் தனது தண்டனையை நிறைவேற்றத் தொடங்குவார்.
நம்பிக்கை மோசடிக் குற்றத்துக்கு அதிகபட்சம் 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனையுடம் அபராதமும் விதிக்கப்படலாம்.

