2021க்கான மேல்நிலைத் தேர்வுகளில் 93.5% மாணவர்கள் தேர்ச்சி

2021க்கான மேல்நிலைத் தேர்வுகளில் 93.5% மாணவர்கள் தேர்ச்சி

1 mins read
76df2793-20d4-4982-b579-b072e10da346
மேல்நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளும் செயிண்ட் ஆன்ட்ரூஸ் தொடக்கக் கல்லூரி மாணவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு இடையிலும், சென்ற ஆண்டு பொதுக் கல்விச் சான்றிதழ் (ஜிசிஇ) மேல்நிலைத் தேர்வுகளை எழுதிய மாணவர்களில் 93.5 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம் 11,070 மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும், அவர்களில் 10,353 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் கல்வி அமைச்சும் சிங்கப்பூர்த் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகமும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 22) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.

சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த முறை தேர்ச்சி விகிதம் 0.1 விழுக்காடு குறைவு.

சிங்கப்பூரின் தன்னாட்சி பெற்ற பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கும், உபகாரச் சம்பளத்திற்கும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் இணையம் வழி விண்ணப்பிக்கலாம்.

பலதுறைத் தொழிற்கல்லூரிகளின் சுமார் 120 பாடத்திட்டங்களில் சேர்ந்து பயில்வோர், ஓராண்டுக்கு முன்பே பட்டயம் பெறும் வகையில் பாடத்திட்டம் சுருக்கப்பட்டுள்ளது. அவர்கள் பிப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதலைப் பெற விரும்பும் மாணவர்கள் பள்ளிகளில் செயல்படும் ஆலோசகர்களை நாடலாம்.

'மைஸ்கிச்ஸ்ஃபியூச்சர்' இணையவாசலிலும் மேல்விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

அல்லது, 6831 1420 என்ற தொலைபேசி எண்ணையோ, MOE_ECG@moe.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியையோ தொடர்புகொள்ளலாம்.