2006க்கு அடுத்து தலைசிறந்த மேல்நிலைத் தேர்வு முடிவுகள்

2006க்கு அடுத்து தலைசிறந்த மேல்நிலைத் தேர்வு முடிவுகள்

1 mins read
798561ff-6b75-4230-b867-07781b8c5d36
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக்கல்லூரியில் இன்று தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

கொவிட்-19 கொள்ளைநோய் விளைவித்த சிக்கலான சூழ்நிலைகளுக்கிடையே, பொதுக் கல்விச் சான்றிதழ் மேல்நிலைத் தேர்வை கடந்த ஆண்டு எழுதிய சிங்கப்பூர் மாணவர்கள், 2006ஆம் ஆண்டுக்கு அடுத்து இப்போது தலைசிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர்.

குறைந்தது மூன்று H2 தேர்ச்சிகள், ஆங்கிலமொழிப் பொதுத்தாள் அல்லது அறிவுசார் ஆய்வியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 10,905 அல்லது 93.6%.

தேர்வு எழுதிய ஒட்டுமொத்த மாணவர்கள் எண்ணிக்கை 11,646 என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுக் கழகமும் இன்று வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.

2019ல் பெற்ற முடிவான 93.4 விழுக்காட்டைவிட இப்போது பெற்றிருக்கும் 93.6 விழுக்காடு சற்று உயர்ந்துள்ள விகிதம். 2006க்கு அடுத்து தலைசிறந்த மேல்நிலைத் தேர்வு முடிவுகள் இப்போது பெறப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.

கடந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்டதுபோல, இன்றும் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள பள்ளிக்குச் சென்ற மாணவர்கள், பள்ளி அரங்குக்குப் பதிலாக தங்கள் வகுப்பறைகளில் அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் காரணமாக இந்த மாற்றம் செய்யப்பட்டது.

கொவிட்-19 நிலைமை காரணமாக, கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்கள், பள்ளிகளில் நேரடியாகக் கல்வி கற்பதற்குப் பதிலாக தங்கள் இல்லத்திலிருந்து பாடங்களை இணையம் வழி கற்றனர்.

இதன் தொடர்பிலான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய அச்சுப் பிரதியை நாடவும்!