எதிர்காலத்திற்குத் தயாராகும் புதிய சுகாதாரப் பராமரிப்பு ஊழியரணித் திட்டம்; மருத்துவமனைகளில் ரோபோ

எதிர்காலத்திற்குத் தயாராகும் புதிய சுகாதாரப் பராமரிப்பு ஊழியரணித் திட்டம்; மருத்துவமனைகளில் ரோபோ

2 mins read
e87248fd-1e22-4c17-bba8-7e1e961632df
இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் வருகையாளரின் வெப்பநிலையைச் சோதித்த பின் அனுமதிக்கும் தொழில்நுட்பம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
Google News Preferred Icon

மருத்துவமனைக்கு வருவோரின் வெப்பநிலையைச் சோதிக்கும் இயந்திர மனிதன், முகக்கவசமின்றி வருபவர்களுக்கு அனுமதி அளிக்காது. தேசிய பல்கலைக்கழகச் சுகாதாரக் குழுமத்தின் (என்யுஹெச்எஸ்) மூன்று மருத்துவமனைகளில் இப்புதிய திட்டம் அடுத்த மாதம் முதல் நடப்புக்கு வருகிறது. வருகையாளர்களை 'சேஃப்எண்ட்ரி' எனும் பதிவுமுறையில் வருடி மருத்துவமனைக்குள் அனுமதிப்பதுடன் அவர்களின் உடல் வெப்பத்தையும் இந்த இயந்திர மனிதர்கள் சோதனையிடும்.

பாதுகாப்புக்கும் வரவேற்புக்கும் பயன்படுத்தப்படும் இந்த இயந்திர மனிதர்கள், வருகையாளர்கள் மற்றும் நோயாளிகளில் முகக்கவசம் அணியாதோரையும் பாதுகாப்பு இடைவெளி விதிமுறைகளை மீறுவோரையும் கண்டறிந்து அவர்கள் நுழைய அனுமதிக்காது.

அடுத்த மாதம் இங் டெங் ஃபோங் மருத்துவமனையிலும் நவம்பர் மாதத்தில் அலெக்சாண்டிரா மருத்துவமனையிலும் இந்த இயந்திர மனிதர்கள் பணியில் இறக்கப்படும்.

அதே காலகட்டத்தில், தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் நடமாடும் பாதுகாவல் இயந்திர மனிதத் திட்டமும் தொடங்கும்.

இதன்படி கூட்டம் கூடுவது, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுவது போன்ற சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளை இயந்திர மனிதன் அடையாளம் கண்டு பாதுகாவல் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும்.

இயந்திர மனிதர்கள், டிரோன் எனப்படும் ஆளில்லா வானூர்திகள், இணைப்பில்லா தொழில்நுட்பங்கள் ஆகியவையே புதிய இயல்புநிலையாகும் என்று என்யுஹெச்எஸ் அதன் அறிக்கையில் நேற்று தெரிவித்தது.

இத்தகைய தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் ஊழியர்களின் தீவிரச் செயல்பாடுகள் குறைக்கப்படும் என்றும் மருத்துவமனைகள் தங்களின் வசதிகளை மேலும் பயனுள்ள, பாதுகாப்பான, ஆக்கபூர்வமான முறையில் நிர்வகிக்கலாம் என்றும் கூறப்பட்டது.

நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் ஒவ்வொரு மருத்துவமனையிலும் செலவுகள் 50% குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் மனிதர்களுக்குப் பதிலாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்றும் புதிய திறனைக் கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டில் அவர்கள் ஈடுபட இத்தொழில்நுட்பம் ஆதரவாக இருக்கும் என்றும் என்யுஹெச்எஸ் தலைமை செயல்பாட்டு அதிகாரி திரு இங் கியன் சுவான் கூறினார்.

கட்டடங்களின் வெளிப்புறத்தைக் கண்காணிக்க டிரோன்கள் பயன்படுத்தப்படும். விரிசல்கள், நீர்க் கசிவுகள் போன்ற பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் அம்சங்களை அவை கண்டறிய உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பாக்டீரியா, கிருமிகள் போன்றவை பரவுவதைத் தடுக்க நோயாளிகளாலும் வருகையாளர்களாலும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் மின்தூக்கிகளில் அடுத்த ஆண்டுக்குள் இணைப்பில்லா பொத்தான்கள் பொருத்தப்படும்.