தேர்தலின்போது பொய்ச் செய்தி பரவலுக்கு எதிராக ஃபிக்கா, பொஃப்மா

தேர்தலின்போது பொய்ச் செய்தி பரவலுக்கு எதிராக ஃபிக்கா, பொஃப்மா

2 mins read
5cbaa8ce-4190-4d32-99c9-029ab2712209
பொதுத் தேர்தல் காலத்தின்போது தேர்தல் சம்பந்தமான அனைத்து இணையம் வாயிலான விளம்பரங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் வலியுறுத்தினார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
Google News Preferred Icon

பொதுத் தேர்தல் நெருங்குகையில், சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி பொய்ச் செய்தி பரப்பும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அதை எதிர்கொள்ள ஃபிக்கா எனப்படும் வெளிநாட்டுத் தலையீடு எதிர்நடவடிக்கைகள் சட்டமும் பொஃப்மா எனப்படும் இணையம்வழி பொய்ச் செய்திக்கும் சூழ்ச்சித் திறத்திற்கும் எதிரான பாதுகாப்புச் சட்டமும் பயன்படுத்தப்படும் என்று உள்துறை துணை அமைச்சர் சுன் ஷுவெலிங் புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமூக ஊடகத்தைப் பயன்படுத்தி பொய்ச் செய்திகள் பரப்பும் அபாயம் இருப்பது அரசாங்கத்துக்குத் தெரியும் என்றார் அவர்.

உள்நாட்டு அரசியலுக்குப் பாதிப்பு ஏற்படுத்த வெளிநாட்டினரோ அல்லது வெளிநாட்டு அமைப்பினரோ சமூக ஊடகம் மூலம் பொய்ச் செய்திகளைப் பரப்பினால் அது வெளிநாட்டுத் தலையீடாகக் கருதப்படும் என்று திருவாட்டி சுன் கூறினார்.

தேர்தல் காலத்தின்போது, பொதுமக்களின் நலனுக்கு எதிராகப் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டால் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு எதிராக பொஃப்மா உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடும் என்றும் திருவாட்டி சுன் கூறினார்.

பொதுத் தேர்தல் காலத்தின்போது தேர்தல் சம்பந்தமான அனைத்து இணையம் வாயிலான விளம்பரங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விதிமுறைகளை மீறும் விளம்பரங்களை நீக்கம் செய்ய சமூக ஊடகங்களுக்குத் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிடலாம் என்று அவர் கூறினார்.

பொதுத் தேர்தலின்போது அல்லது அதற்கு முன்பு வெளிநாட்டு சமூக ஊடகப் பக்கங்கள் பொய்ச் செய்திகளைப் பரப்பினால் அதன் விளைவாக ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மதிப்பீடு செய்துள்ளதா என்ற கேள்வியை ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வூ மெங் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் திருவாட்டி சுன் நாடாளுமன்றத்தில் பேசினார்.

குறிப்புச் சொற்கள்