சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தில் உள்ள தென்கிழக்காசியக் கலைக் கண்காட்சிக்கூடம் புதுப்பிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாகச் சில மாதங்கள் மூடப்படுகிறது.
அந்தக் கண்காட்சிக்கூடம் ஏப்ரல் 2026 முதல் அக்டோபர் 2027 வரை மூடப்படும் என தேசியக் கலைக்கூடம் அதன் இணையப் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.
தென்கிழக்காசியக் கலைக் கண்காட்சிக்கூடம் உள்ள பகுதி முதன்முதலாக 2015ஆம் ஆண்டு பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது. அதன் பிறகு நடக்கும் முதல் பெரிய மறுசீரமைப்புப் பணி இதுவாகும்.
தென்கிழக்காசியக் கலைக் கண்காட்சிக்கூடத்தில் 300க்கும் அதிகமான கலைப் பொருள்கள் உள்ளன. கடந்த ஆண்டு கண்காட்சிக்கூடம் அதன் பத்தாம் ஆண்டுநிறைவைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேசியக் கலைக்கூடத்தின் ரோட்டுன்டா நூலகமும் ஆவணக் காப்பகமும் இந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி முதல் 2027ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மூடப்படும். அங்கும் புதுப்பிப்புப் பணிகள் இடம்பெறுகின்றன.
இந்த நாள்களில் பொதுமக்கள் நேரடியாக நூலகத்திற்கு வரமுடியாது. மார்ச் 8ஆம் தேதி முதல் பொதுமக்கள் இணையம் வழி முன்பதிவுகளை மேற்கொண்டு நூலகம் மற்றும் ஆவணக் காப்பகத்திற்குச் செல்லலாம்.
மறுசீரமைப்புப் பணிகளால் தேசியக் கலைக்கூடத்தின் மற்ற பகுதிகள் ஏதேனும் பாதிக்கப்படுமா என்பது குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அதன் அதிகாரிகளிடம் தகவல் கேட்டுள்ளது.

