பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி, தனது சேவைத் தரத்தை உயர்த்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த உள்ளது.
அந்தப் பயன்பாடு கைகூட சில ஆண்டுகள் ஆகும் என்றாலும் நடப்புக்கு வந்த பின்னர் ரயில்களின் தாமதம் குறையும்; கோளாறுகளைக் கண்டறிவதற்கு ஆகும் செலவு கட்டுக்குள் இருக்கும்.
ரயில் தொடர்பான கோளாறு நிகழும் முன்னரே அதனைக் கண்டறிந்து சீர்செய்ய ‘ஜார்விஸ்’ (Jarvis) என்னும் செயற்கை நுண்ணறிவுத் தளம் எஸ்எம்ஆர்டிக்குக் கைகொடுக்கும்.
பராமரிப்புக் குழுக்கள் ஓர் எளிய ‘சாட்பாட்’ பாணியிலான இணைப்பைப் பயன்படுத்தி, ரயில் கட்டமைப்புச் சாதனங்கள் எப்போது பழுதடையக்கூடும் என்பது குறித்த கணிப்புகளை விரைவாக எட்ட முடியும்.
அந்த விரைவான நடைமுறை, பழுதுகள் ஏற்படுமுன்னரே நடவடிக்கை எடுக்கவும் ரயில் போக்குவரத்தில் தாமதங்களைக் குறைக்கவும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் பயணிகளின் பயணங்களைப் பாதுகாப்பானதாக மாற்றவும் உதவும்.
எஸ்எம்ஆர்டியின் தொழில்நுட்பப் பிரிவான ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டெக்னாலஜிஸ்’, ‘ஆரக்கிள்’ நிறுவனத்துடன் இணைந்து ‘ஜார்விஸ்’ தளத்தை உருவாக்கி உள்ளது. தற்போது, ஏறத்தாழ 50 பயனாளர்கள் அதனைச் சோதனை முறையில் பயன்படுத்துகிறார்கள்.
சிங்கப்பூரில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) நடைபெற்ற ஆரக்கிள் செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் இந்தத் திட்டம் பற்றி அறிவிக்கப்பட்டது.
ரயில் போக்குவரத்துக்குத் தேவையான பாதுகாப்புமிக்க தரநிலைகளைப் பூர்த்திசெய்வதை உறுதிசெய்யும் அதேநேரம், ரயில்வே பொறியியலில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் புகுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது எஸ்எம்ஆர்டியின் இந்தப் புதிய திட்டம்.
தொடர்புடைய செய்திகள்
வங்கி, சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளைத் தாண்டி, பொதுப் போக்குவரத்து அம்சங்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பரவி வருவதையே இது பிரதிபலிக்கிறது.
இருப்பினும், பொதுப் போக்குவரத்தில் அதன் செயல்திறன் பற்றி இனிமேல்தான் தெரியவரும்.
தற்போதைய நிலையில், மனிதர்களின் முடிவெடுக்கும் திறனை அடியோடு மாற்றுவதற்குப் பதிலாக, அந்தத் திறனுக்குத் துணைபுரியவே தொழில்நுட்பம் சிறந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது.

