மலேசிய நிறுவன மேலாளருக்கு லஞ்சம் கொடுத்த சிங்கப்பூர் அதிகாரி மீது குற்றச்சாட்டு

மலேசிய நிறுவன மேலாளருக்கு லஞ்சம் கொடுத்த சிங்கப்பூர் அதிகாரி மீது குற்றச்சாட்டு

2 mins read
386ec659-94fc-49bc-a876-2a1913e75738
ஹூய் சியூ யானின் எம்ஜேஐ யுனிவர்சல் நிறுவனத்துக்கும் சாரோன் பொக்பாண்ட் மலேசியா எனும் நிறுவனத்திற்கு இடையே வர்த்தக உறவை வலுப்படுத்தும் நோக்கில் லஞ்சம் வழங்கப்பட்டது. - படம்: இணையம்
Google News Preferred Icon

கால்நடை தீவனத்தை விற்கும் சிங்கப்பூர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயலாக்க அதிகாரி மீது, ஜூலை 24 அன்று மலேசிய நிறுவன மேலாளருக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

68 வயதான ஹூய் சியூ யான் என்ற அந்தச் சிங்கப்பூரர் மீது ஓர் ஊழல் குற்றச்சாட்டும், பொய்க் கணக்குகளைக் காண்பித்ததற்காக இரு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டன.

ஹூய், ஜூலை 2007 முதல் நவம்பர் 2019 வரை எம்ஜேஐ யுனிவர்சல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். பின்னர் நவம்பர் 2022 வரை அதன் தலைமை செயலாக்க அதிகாரியாகப் பணியாற்றினார் என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவின் (சிபிஐபி) செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

2019க்கும் 2020க்கும் இடையில், கோலாலம்பூரில் எட்டு முதல் 10 சந்தர்ப்பங்களில், ஹூய் ஒரு மலேசிய நிறுவனத்தின் கொள்முதல் மேலாளரரான சீ யூ டெங் என்பவருக்குக் குறைந்தபட்சம் US$100,000 (S$128,000) ரொக்கமாக லஞ்சம் கொடுத்ததாக நீதிமன்ற ஆவணங்களில் கூறப்படுகிறது.

இது இங் குவோக் சியுவான் என அடையாளம் காணப்பட்ட ஓர் இடைத்தரகர் மூலம் செய்யப்பட்டது. மேலும் இது எம்ஜேஐ மற்றும் நீதிமன்ற ஆவணங்களில் சாரோன் பொக்பாண்ட் மலேசியா எனும் நிறுவனத்திற்கு இடையேயான வர்த்தக உறவை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு வெகுமதியாகக் கூறப்படுகிறது.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிங்கப்பூருக்கு வெளியே ஊழல் குற்றத்தைச் செய்யும் சிங்கப்பூர் குடிமகன், அந்தக் குற்றம் சிங்கப்பூருக்குள் செய்யப்பட்டது போல் நடத்தப்படலாம் என்று சிபிஐபி குறிப்பிட்டது.

டிசம்பர் 2020க்கும் ஜூலை 2022க்கும் இடையில், ஹூய், இங்கை, எம்ஜேஐ நிறுவனத்துக்கு 35 விலைப்பட்டியல்களைச் சமர்ப்பிக்கத் தூண்டியதாகக் கூறப்படுகிறது. அதில் சுமார் US$72,500 மதிப்புள்ள அதிகப்படியான பணம் குறிப்பிடப்பட்டது. இந்த விலைப்பட்டியல்கள், இங் இயக்குநராக இருந்த என்கே நியூட்ராசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து வந்தவை.

சிங்கப்பூர் நிறுவனத்தை ஏமாற்றும் நோக்கத்துடன், டோரு சாடோ மற்றும் சுவா லே பெங் என அடையாளம் காணப்பட்ட இரண்டு எம்ஜேஐ ஊழியர்களுடன் சதி செய்து ஹூய் இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஹூய்யின் வழக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும். ஹூய் தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வாரா என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை.

ஹூய்யின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஐந்து ஆண்டு சிறை, $100,000 அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
லஞ்சம்வர்த்தகம்கால்நடை