முடிவிற்கு வரும் குதிரைப் பந்தயம்

முடிவிற்கு வரும் குதிரைப் பந்தயம்

2 mins read
8d9607ae-e6cb-4201-8f71-9ede59d6a046
சிங்கப்பூரில் 180 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் குதிரைப் பந்தயம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளது -
Google News Preferred Icon

கிராஞ்சியில் சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றம் (சிங்கப்பூர் டர்ஃப் கிளப்) அமைந்திருக்கும் நிலப்பகுதி, 2027 மார்ச் மாதத்திற்குள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும். வீடமைப்பு, இதர மேம்பாடுகளுக்கு அந்த இடம் வழிவிடுகிறது.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியைச் சுற்றியுள்ள பகுதிகளையும் உட்லண்ட்ஸ் வட்டாரத்தையும் மேம்படுத்துவது, லிம் சூ காங் வட்டாரத்தை உயர்தொழில்நுட்ப வேளாண் உணவுக் குழுமமாக உருமாற்றுவது உள்ளிட்டவை மேம்பாட்டுத் திட்டங்களில் அடங்கும்.

இதன்மூலம், சிங்கப்பூரில் 180 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் குதிரைப் பந்தயம் அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே அப்பந்தயத்தைப் பார்ப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதன் தொடர்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா, "இந்த முடிவு எளிதான ஒன்றன்று என்றாலும் தேவையான ஒன்று. நிலத்திற்கான தேவை அதிகரித்து வருகிறது. அதன் பொருட்டு, நிலப் பயன்பாட்டுத் திட்டங்களை அரசாங்கம் அப்போதைக்கு அப்போது மறுஆய்வு செய்கிறது.

"ஏனெனில், சிங்கப்பூரர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய வளங்கள் மேம்படுத்தப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் விரும்புகிறோம்," என்று விவரித்தார்.

ஏறக்குறைய 120 ஹெக்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும் அந்நிலப்பகுதி, ஏறத்தாழ 200 காற்பந்துத் திடல்களின் அளவிற்கு ஈடானது; கரையோரப் பூந்தோட்டங்களைவிடப் பெரியது.

சிங்கப்பூர் குதிரைப் பந்தய மன்றத்தில் ஏறக்குறைய 350 பேர் பணிபுரிகின்றனர். 2024 அக்டோபர் 5ஆம் தேதி கடைசி குதிரைப் பந்தயம் நடைபெறும். 2027 மார்ச் மாதத்திற்குள் அவ்வளாகம் மூடப்படும்.

நிதி அமைச்சும் தேசிய வளர்ச்சி அமைச்சும் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், "சிங்கப்பூரில் குதிரைப் பந்தயம் நடைபெறும் இடத்தை மறுமேம்பாட்டிற்கு விடுவது தொடர்பான முடிவு, எதிர்காலத் தேவைகளுக்கு அந்த நிலத்தையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் முழுமையாகத் திட்டமிட வகைசெய்யும்," என்று குறிப்பிட்டுள்ளன.