பத்து உடற்பிடிப்பு நிலையங்களில் அதிரடிச் சோதனை

பத்து உடற்பிடிப்பு நிலையங்களில் அதிரடிச் சோதனை

2 mins read
4fd793ec-6828-40a3-bf50-b0596c8cd143
விசாரணையில் உள்ள ஏழு பெண்களில் ஒரு பெண் பாலியல் சேவை வழங்கியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சைனாடவுன், ஜாலான் புசார் வட்டாரங்களில் உள்ள உடற்பிடிப்பு நிலையங்களைக் குறிவைத்து காவல்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

பீப்பிள்ஸ் பார்க் கடைத்தொகுதி, பீப்பிள்ஸ் பார்க் சென்டர், சையது ஆல்வி சாலை ஆகியவற்றில் இயங்கும் 10 உடற்பிடிப்பு நிலையங்களில் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அந்த 10 உடற்பிடிப்பு நிலையங்களில் ஒன்பது நிலையங்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டவை. அதேபோல் ஐந்து நிலையங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெற்றன.

ஏழு பெண்கள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களின் வயது 32க்கும் 43க்கும் இடைப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஏழு பெண்களில் ஒரு பெண் பாலியல் சேவை வழங்கிய சந்தேகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பீப்பிள்ஸ் பார்க் கடைத்தொகுதியில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஓர் உடற்பிடிப்பு நிலையத்தில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மிகச் சிறிய இடத்தில் மூன்று பிரிவுகளாக அந்த நிலையம் செயல்பட்டது. அங்குச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சில பொருள்கள் இருந்தன.

குடியிருப்பு வட்டாரங்கள் இருக்கும் இடங்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

“உடற்பிடிப்பு நிலையம் எனக்கூறி பீப்பிள்ஸ் பார்க் கடைத்தொகுதி, பீப்பிள்ஸ் பார்க் சென்டர் உள்ளிட்ட இடங்களில் பாலியல் சேவை வழங்குவதாகத் தங்களுக்குத் தகவல் வந்தது. அதனால் சோதனையிட்டோம்.” என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குடியிருப்பு வட்டாரங்களில் அதிகமாக உடற்பிடிப்பு நிலையங்கள் திறக்கப்படுவதாகச் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் அக்கறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்