பொங்கோலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பிப்ரவரி 13ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது.
புளோக் 326C சுமாங் வாக்கில் இருக்கும் 16வது மாடி வீட்டில் நடந்த அச்சம்பவத்தில் மூவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவ்விபத்து குறித்துத் தங்களுக்கு அன்றைய தினம் காலை 7 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அவ்வீட்டில் மூண்ட தீயைத் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அணைத்ததாகவும் அது சொன்னது.
முதற்கட்ட விசாரணையில், அக்குடியிருப்பின் வரவேற்பறையில் இருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்றிலிருந்து தீ பரவியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
தீ விபத்தில் ஏற்பட்ட புகையால் பாதிக்கப்பட்ட மூவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
நடமாட்டச் சாதனங்களுக்கு அசல் மின்னூட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் சாதனத்தை நீண்ட நேரத்திற்கோ அல்லது இரவு முழுவதுமோ மின்னூட்டம் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்களை அது வலியுறுத்தியுள்ளது.

