ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூருக்கு சனிக்கிழமையன்று (நவம்பர் 22) வந்துகொண்டிருந்த ஸ்கூட் விமானத்தில் ஒரு பயணியின் மின்தேக்கி (power bank ) அதிகச் சூடானதால் சிறிய அளவிலான தீச்சம்பவம் ஏற்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானச் சிப்பந்திகள் உடனடியாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்வைத்த கேள்விகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பதிலளித்த ஸ்கூட் நிறுவனம், எண் TR939 விமானத்தில் நடந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியது.
ஹாங்காங்கைவிட்டு விமானம் மாலை 5.48 மணியளவில் புறப்பட்டுள்ளது. விமானம் மேற்கொண்ட பயணத்தில் எந்த நேரத்தில் சம்பவம் நடந்தது என்பதைப் பற்றி விவரங்கள் இல்லை.
“எங்களது விமானச் சிப்பந்திகள், சம்பவத்தை முறையாக கையாண்டுள்ளனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானம் சிங்கப்பூரில் இரவு 9.06 மணிக்குத் தடைகளின்றித் தரையிறங்கியதும் அனைத்துப் பயணிகளும் வழக்கம்போல வெளியேறினர். விமான நிலையத்தில் அவசர சேவைகள் தயார்நிலையில் இருந்தன என்று,” ஸ்கூட் விமானம் தெரிவித்துள்ளது.
பயணம் தரையிறங்கவிருந்த நேரத்தில் தீப்பற்றி எரிவதுபோன்ற கடுமையான நெடி வந்தது என்று அவ்விமானப் பயணிகளில் ஒருவர் சியாவ்ஹாங்ஷு சமூக ஊடகப் பக்கம் வழியாகத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, விரைந்து செயல்பட்ட விமானச் சிப்பந்திகள் விமானத்தின் பின்பகுதியிலிருந்து ஒரு கைப்பையை வெளியே இழுத்தனர் என்று பெயர்கூற விரும்பாத அந்த 26 வயதுப் பெண் பயணி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
கறுப்புநிற மடிக்கணினிப் பை போன்று அது தெரிந்தது என்றும் சிப்பந்திகள் அதனைக் கழிவறைக்குள் எடுத்துச்சென்றனர் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
விமானம் தரையிறங்கிய பின்னரே விமானத்தில் தீப்பற்றியது பற்றி பயணிகளுக்கு விமானி ஓர் அறிவிப்புமூலம் தெரிவித்தார் என்றும் அந்தப் பெண் பயணி குறிப்பிட்டார்.
பயணிகள் உடனடியாக விமானத்தைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் தீயணைப்புப் படையினர் வந்து கைப்பை வைக்குமிடத்தைச் சோதித்தனர் என்றும் அவர் கூறினார்.
விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதற்கு நன்றிதெரிவித்துக்கொண்ட அவர், ஆயினும் விமானச் சிப்பந்திகள் இன்னும் தெளிவாகத் தகவல் தெரிவித்திருக்கலாம் என்றும் சொன்னார்.
பயணத்தில் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதுடன் தமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் ஸ்கூட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

