சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பயணி வெளியேற்றம்

1 mins read
7dd28969-db81-4d0b-9826-f78265dc4ed9
விமானச் சிப்பந்தியை நோக்கி தகாத சொற்களைப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில், ஆண் பயணி ஒருவர் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஆடவர் ஒருவர், விமானச் சிப்பந்தியை நோக்கி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரில் அவ்விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஹாங்காங்கிலிருந்து சிங்கப்பூர் வந்த அந்த எஸ்கியூ897 விமானம், செப்டம்பர் 10ஆம் தேதி மூன்று மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டதாகத் விமானத் தரவுகள் காட்டின.

விமானம் புறப்படுவதற்கு முன்னர், அந்தப் பயணி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக எஸ்ஐஏ பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

“அந்தப் பயணி, விமானச் சிப்பந்திமீது மீண்டும் மீண்டும் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, விமானிகள் நிலைமையை ஆராய்ந்து, மற்ற பயணிகள், விமான ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு அவரை வெளியேற்ற முடிவெடுத்தனர்,” என்றார் பேச்சாளர்.

அந்தப் பயணி ஹாங்காங் அனைத்துலக விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பேச்சாளர் கூறினார்.

அந்த ஆடவர் விமானம் புறப்படுவதற்கு முன்னர் விமானச் சிப்பந்தியிடம் மதுபானம் கேட்டதாகவும் அவரின் கோரிக்கை மறுக்கப்பட்டதாகவும் ஹாங்காங் செய்தி நிறுவனமான ‘எச்கே01’ தெரிவித்தது.

அச்சம்பவத்தில் 71 வயது சிங்கப்பூர் ஆடவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்றும் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் உள்ளூர் காவல்துறை தெரிவித்ததாக ‘எச்கே01’ கூறியது.

குறிப்புச் சொற்கள்