முஸ்லிம் விவகாரங்களுக்கான முன்னாள் தற்காலிக அமைச்சர் ஃபைஷால் இப்ராஹிம் பதவி விலகியதில் உடலுறுதிப் பயிற்றுவிப்பாளர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாகக் கூறிய டிக்டாக் பதிவு அகற்றப்பட்டுள்ளது.
இணையவழிப் பாதுகாப்பு ஆணையம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து அப்பதிவு அகற்றப்பட்டுவிட்டது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள அந்த ஆணையம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி செயல்படத் தொடங்கியது. இணைய அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டோர் அனைவரும் நாடக்கூடிய ஒரே தளமாக அது விளங்குகிறது.
அதன் மூலம் பதிவுகளும் குற்றம்புரிந்தோரின் கணக்குகளும் விரைவில் அகற்றப்படலாம்.
அந்த வகையில், இந்த விவகாரம் தொடர்பிலான புகார் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) கொடுக்கப்பட்டதாக ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தார்.
“அந்தப் புகார் ஆராயப்பட்ட பிறகு இணையத்தில் ஆபத்து விளைவிக்கும் செயல் இடம்பெற்றது உறுதிப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இணையவழிப் பாதுகாப்பு ஆணையம் சம்பந்தப்பட்ட பதிவு தொடர்பில் நடவடிக்கை எடுத்தது. அதன் பிறகு ஜூலை 28 நிலவரப்படி அப்பதிவு இப்போது அகற்றப்பட்டுவிட்டது,” என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
யார் புகார் அளித்தார் என்பதை ஆணையம் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், உடலுறுதிப் பயிற்றுவிப்பாளரான ரசிடா கெளடால், ஃபைஷால் பதவி விலகல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள பெண் தானல்ல என்று கூறியுள்ளார்.


