10,000 பேருக்குச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வழங்கும் முன்னணி நிறுவனம்

10,000 பேருக்குச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வழங்கும் முன்னணி நிறுவனம்

1 mins read
a335223f-75f4-40b6-b15d-8e4bf91392fb
‘ஆரக்கிள்’ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஃப்ரா கேட்ஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆரக்கிள்’, சிங்கப்பூரில் மாணவர்கள், வல்லுநர்கள் என 10,000 பேர் வரைக்கும் இலவசமாகச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சி வழங்கவிருக்கிறது.

நாட்டின் மின்னிலக்க ஊழியரணியை வலுப்படுத்தும் வகையில் அடுத்த மூவாண்டுகளில் இப்பயிற்சியை வழங்க ஆரக்கிள் திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஐந்தாண்டுகளில் நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் திறனாளர் தொகுதியை மூன்று மடங்காக, அதாவது 15,000ஆக உயர்த்துவது சிங்கப்பூரின் நோக்கம்.

இந்நிலையில், ஆரக்கிள் நிறுவனத்தின் பயிற்சித் திட்டம், சிங்கப்பூர் தனது இலக்கை எட்டுவதற்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூர் வந்துள்ள ஆரக்கிள் தலைமை நிர்வாக அதிகாரி சஃப்ரா கேட்ஸ், 61, ஸ்ட்ரெய்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின்போது, “நாங்கள் கவனம் செலுத்தும் அம்சங்களில் கல்வியும் ஒன்று,” என்று சொன்னார்.

கடந்த 15 ஆண்டுகளாக, சிங்கப்பூரின் 14 உயர்கல்வி நிலையங்களில் கணினி சார்ந்த கல்விக்கு ஆரக்கிள் ஆதரவளித்து வருகிறது.

இதனிடையே, இவ்வாண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் தனது இரண்டாவது தரவு மையத்தை ஆரக்கிள் திறக்கவிருப்பதாகவும் திருவாட்டி கேட்ஸ் குறிப்பிட்டார்.

தமது சிங்கப்பூர்ப் பயணத்தின்போது பிரதமர் லீ சியன் லூங், வாடிக்கையாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்செயற்கை நுண்ணறிவுபயிற்சி