ஈரானைக் கற்காலத்துக்குத் தள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் வியாழக்கிழமை (ஏப்ரல் 2) காலை உயர்ந்தன.
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை எனில் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் ஈரான்மீது மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று திரு டிரம்ப் எச்சரித்திருந்தார்.
“ஈரானுக்குரிய கற்காலத்திற்கே நாம் அவர்களைக் கொண்டு செல்வோம்,” என்று ஏப்ரல் 1ஆம் தேதி ஆற்றிய சிறப்புரையில் அவர் மிரட்டல் விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, சிங்கப்பூர் நேரம் காலை 9.33 மணிக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 4.6 விழுக்காடு அதிகரித்து US$105.81ஐத் தொட்டது. அமெரிக்க எண்ணெய்யும் 3.8 விழுக்காடு ஏற்றம் கண்டு US$103.89 ஆனது.
அனைத்துலக அளவிலான எண்ணெய் விலை அளவீட்டுக் குறியீடு போருக்கு முந்திய விலையைக் காட்டிலும் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஈரானுடனான ஒரு மாத கால அமெரிக்க - இஸ்ரேல் போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு கடந்த இரண்டு நாள்களாக நிலவியதன் காரணமாக உலகளாவிய பங்குகள் உயர்ந்து, எண்ணெய் விலைகள் குறைந்தன.
இந்நிலையில், திரு டிரம்ப் விடுத்த எச்சரிக்கை நிலைமையைத் தலைகீழாக மாற்றிவிட்டது.
திரு டிரம்ப்பின் பேச்சு ஏமாற்றமளிப்பதாக பெப்பர்ஸ்டோன் குழுமத்தின் ஆராய்ச்சி உத்தி வகுப்பாளரான திருவாட்டி டிலின் வூ தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“போரில் வெற்றி என அறிவித்த அதேவேளையில், ஈரானின் எரிசக்தி மற்றும் மின்சாரக் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் டிரம்ப் மிரட்டுகிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்படும் என்றும் டிரம்ப் கூறுகிறார்.
“மத்திய கிழக்கிலிருந்து வெளியேறுவதாக அவர் இதற்கு முன்னர் பேசியது தற்போது சந்தைகளை அமைதிப்படுத்திய அதே வேளையில், தற்போது அவர் பேசி இருப்பது அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிடும் ஒரு வழியாகவே தெரிகிறது.
“பதற்றத்தை முழுமையாகத் தணிப்பதைக் காட்டிலும், முதலில் அழுத்தம் கொடுக்கும் உத்தியையே இன்னும் கடைப்பிடிக்க அவர் விரும்புகிறார்,” என்று திருவாட்டி டிலின் கூறினார்.

