தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ், புதிதாக என்டியுசி சமூக நிதியத்தை வியாழக்கிழமை (ஏப்ரல் 9) தொடங்கியுள்ளது.
சிங்கப்பூரின் இளம்பிள்ளைகள், மூத்தோர் ஆகியோருக்கான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில் நிதியம் உருவாக்கப்பட்டதாகத் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியது.
இளம்பிள்ளைகளுக்கான ‘பிரைட் ஹொரைசன்ஸ் ஃபண்ட் பை என்டியுசி ஃபர்ஸ்ட் கேம்பஸ்’ (Bright Horizons Fund by NTUC First Campus), மூத்தோருக்கான ‘ஹெல்த் ஃபார் லைஃப்’ (Health For Life) ஆகிய நன்கொடை அமைப்புகளைப் புதிய நிதியம் ஒன்றிணைத்துள்ளது.
மாறிவரும் சிங்கப்பூரில் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மேலும் ஒருங்கிணைந்த முறையில் சேவையாற்றுவது இதன் நோக்கம்.
புதிய நிதியம், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 மில்லியன் வெள்ளி மதிப்பிலான அறக்கட்டளையாக உருவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த நிதியத்தால் 10,000 பிள்ளைகள் வரையிலும், 3,000 மூத்தோர் வரையிலும் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியத்திற்கான தொடக்க நிகழ்ச்சியில் உரையாற்றிய என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் நியாயமான தொடக்கம் உள்ளதா என்பதும், பெற்றோர் வயதாகும்போது அவர்கள் நன்றாகப் பார்த்துக்கொள்ளப்படுவார்களா என்பதும் பல குறைந்த வருமானக் குடும்பங்களின் அக்கறையாக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
என்டியுசியின் சமூக நோக்கங்களின் மத்தியில் இந்த அக்கறைகள் இருப்பதாகக் குறிப்பிட்ட திரு. இங், இந்த நோக்கங்களுக்கு ஏற்ப என்டியுசி எப்படி செயல்படுகிறது என்பதே இந்த நிதியமாகும் எனக் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
என்டியுசி சமூக நிதியத்தைப் பெருக்குவதன் வழி குறைந்த வருமானம் மற்றும் கூடுதல் தேவையுள்ள குடும்பங்களுக்கு ஆரம்பக் கல்வியையும் உதவியையும் பெறுவதற்கான ஆதரவு கிடைக்கும் என்று திரு. இங் குறிப்பிட்டார்.
வயதான தந்தையையும் தாயாரையும் பராமரிக்கும் திரு. குமரன், இந்த நிதியம் தமக்குப் பெரிதும் கைகொடுக்கும் எனத் தெரிவித்தார்.

