மீன் பண்ணைகளில் உற்பத்தியைப் பெருக்க புதிய ஆய்வு நிலையம்

மீன் பண்ணைகளில் உற்பத்தியைப் பெருக்க புதிய ஆய்வு நிலையம்

2 mins read
3f2c5ba2-ea0a-4d7f-b2ea-19bdf73867da
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி (நடுவில்) முன்னிலையில் ஊட்டம் மற்றும் ஊட்டப்பொருள் தொழில்நுட்ப நிலையத்தை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. - படம்: எஸ்பிஎச் மீடியா
multi-img1 of 2

‘பாராமுண்டி’, ‘ரெட் ஸ்னேப்பர்’, ‌ஷ்ரிம்ப் வகை இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களுக்கு வழங்க ஊட்டச்சத்துமிக்க உணவை உற்பத்திசெய்ய புதிய ஆய்வு, உருவாக்க நிலையம் ஒன்று சிங்கப்பூரில் அமைக்கப்படவுள்ளது.

உள்ளூர்ப் பண்ணைகளில் கடல்வாழ் உயிரினங்களைப் பெருக்க உதவுவது புதிய நிலையத்தின் நோக்கமாகும். சம்பந்தப்பட்ட உயிரினங்களுக்கான உணவு வகையை எப்படி உருவாக்குவது, ஊட்டச்சத்தை எப்படி நிர்ணயிப்பது போன்ற அம்சங்களில் ‘எஃப்2டிசி’ எனப்படும் ஊட்டம் மற்றும் ஊட்டப்பொருள் தொழில்நுட்ப நிலையம் கவனம் செலுத்தும்.

கூட்டு முயற்சி

சிங்கப்பூர் உணவு அமைப்பு, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஆகியவை இணைந்து எஃப்2டிசியை அமைக்கின்றன. எஃப்2டிசி, உயிரினங்களுக்குத் தரப்படும் உணவைச் சோதித்துப் பார்ப்பதற்கும் அதன் தொடர்பில் புத்தாக்கத்துக்கு மெருகூட்டுவதற்கும் ஒரே தளமாக விளங்கும்.

கடல்வாழ் உயிரினங்களுக்கான ஊட்டச்சத்து தொடர்பில் சிங்கப்பூரின் செயல்பாட்டு ஆற்றலை மேம்படுத்துவது நோக்கமாகும். அந்நிலையம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தில் அமைந்திருக்கும்.

ஊட்டுவதற்கான உணவு வகைகளில் உள்ள உணவுப் பொருள்கள் குறித்து பரிசீலிப்பது, அந்த உணவை சாப்பிடும் சம்பந்தப்பட்ட உயிரினங்களுக்கு எவ்வாறு செரிமானமாகின்றன என்பதை ஆராய்தல் போன்ற அம்சங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பும் சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகமும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தன.

உணவின் தரத்தால் ஏற்படும் தாக்கம்

உயிரினங்களுக்குக் கொடுக்கப்படும் உணவின் தரம் உற்பத்திச் செலவு, ஈட்டப்படும் லாபம், மீன்களின் தரம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. எடுத்துக்காட்டாக, புரோபையோட்டிக்ஸ் உள்ள உணவை உட்கொள்ளும் மீன்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு அது, அவை கூடுதல் காலம் வாழ வழிவகுக்கும்.

உணவின் தரத்தை மேம்படுத்துவதன் மூலமாகவே கடல்வாழ் உயிரினப் பண்ணைகளின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து அதிகம் மெருகூட்டவேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி புதன்கிழமை (ஜூன் 3) கூறினார். சிங்கப்பூரில் நடைபெற்ற ‘உலக நீர்வாழ் உயிரின வளர்ப்பு’ எனும் வர்த்தக நிகழ்ச்சியில் அவர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்