குடியிருப்புப் பேட்டைகளில் குதூகலம்

குடியிருப்புப் பேட்டைகளில் குதூகலம்

1 mins read
93a4af06-f326-4ad9-836c-441a5ad6ab49
ஈசூன் நார்த்பாயிண்ட் கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள ஃபுட்சால் விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலையில் தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. - படம்: பே. கார்த்திகேயன்
multi-img1 of 3
Google News Preferred Icon

தேசிய தினக் கொண்டாட்டத்தின் நீட்சியாக, தீவெங்கிலுமுள்ள குடியிருப்புப் பேட்டைகளில் இடம்பெற்ற கேளிக்கை நடவடிக்கைகளில் பங்கேற்று மக்கள் உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர்.

ஈசூன் நார்த்பாயிண்ட் கடைத்தொகுதிக்கு அருகிலுள்ள ஃபுட்சால் விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை 4 மணி முதல் ஏறக்குறைய 40,000 பேர் கட்டம் கட்டமாக வரத்தொடங்கினர். அவர்களில் பெரும்பாலானோர் தேசியக் கொடி நிறங்களான சிவப்பு, வெள்ளை நிறங்களில் ஆடை அணிந்து வந்திருந்தனர். அவர்களில் முதியவர்களும் சக்கர நாற்காலிப் பயனாளர்களும் அடங்குவர்.

உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஆகியோர் நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.

தான் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறினார் இல்லத்தரசி பிரபாவதி ஜோஷித்.

“வயது பேதமின்றி, எல்லாத் தரப்பினரும் ஒருவரிடம் ஒருவர் பண்புடன் நடந்துகொண்டதைக் கண்டபோது மனநிறைவாக இருந்தது,” என்றார் திருவாட்டி பிரபாவதி.

ஈசூன் வட்டாரம் தற்போது அடைந்துள்ள வளர்ச்சி நெகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார், தேசிய சேவையாற்றிய முதல் சேவையாளர்களில் ஒருவரான ஓய்வுபெற்ற கடல்துறை, துறைமுக ஆணைய ஊழியர் ஆ. பன்னீர்செல்வம், 75.

“சிங்கப்பூரர்கள், குறிப்பாக சிங்கப்பூர் இந்தியர்கள் தயங்காமல் பல முயற்சிகளை மேற்கொண்டு நாட்டை முன்னேற்ற வேண்டும் என விரும்புகிறேன்,” என்று திரு பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்