சிங்க நடனப் போட்டியின்போது சாயம் எறிந்த ஆடவருக்குச் சிறை

சிங்க நடனப் போட்டியின்போது சாயம் எறிந்த ஆடவருக்குச் சிறை

2 mins read
7f690e44-6c0f-4474-819a-b9bcdb958350
யாப் செங் ஹின்னுக்கு, 34, ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆடவர் ஒருவர் $1,500 சம்பாதிப்பதற்காக, நீ ஆன் சிட்டியின் ஆறாவது தளத்திலிருந்து முதல் தளத்திற்குச் சிவப்பு நிறச் சாயம் கொண்ட பைகளை வீச ஒப்புக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் சிங்க நடனப் போட்டி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த அந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் இல்லை.

கவனமின்றிச் செயல்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட யாப் செங் ஹின், 34, என்ற அந்த ஆடவருக்கு திங்கட்கிழமை (மார்ச் 9) ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதோடு, சுத்தப்படுத்தும் பணிக்கு $1,000க்கும் மேல் செலுத்தமாறு மலேசியரான அவருக்கு உத்தரவிடப்பட்டது.

அந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால், அவர் கூடுதலாக ஐந்து நாள்கள் சிறையில் இருக்கவேண்டும்.

சாயத்தை வீசி எறிந்தால் கொடுக்கப்படும் என்ற $1,500 யாப்பிற்குக் கிடைத்ததா என்பது குறித்து நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.

நீ ஆன் சிட்டியில் ‘வேலை’ இருப்பதாகக் கூறி, அதைச் செய்தால் $1,500 கிடைக்கும் என்று தெரியாத ஒரு நபர் யாப்பிற்கு அழைத்துச் சொன்னதாக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி இரவு 8 மணி அளவில், யாப் நியூட்டன் உணவு நிலையத்திற்குச் சென்றிருந்தார். அங்கு, சிவப்பு நிறச் சாயத்தைக் கொண்டிருந்த பைகள் வேன் ஒன்றில் இருந்தன.

அந்த வேனில் ஏறிச்சென்ற யாப்பிடம், நீ ஆன் சிட்டியின் சிவிக் பிளாசாவில் அவற்றை எறியும்படி கூறப்பட்டது.

சம்பவம் நடந்த பிறகு, ஏற்பாட்டாளர்களில் ஒருவர் காவல்துறையில் புகார் செய்து, அக்டோபர் 15ஆம் தேதி யாப் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்