மலாய்/முஸ்லிம்களின் வெளிநாட்டு உதவிகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன: மசகோஸ்

மலாய்/முஸ்லிம்களின் வெளிநாட்டு உதவிகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன: மசகோஸ்

2 mins read
5e6b163f-a9bf-4bad-a67e-b8ab2802f578
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, வருடாந்திர நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்றுப் பேசினார். - படம்: பெரித்தா ஹரியான்

வெற்றிபெற்ற சமூகமாக உருவெடுக்க சிங்கப்பூரின் மலாய்/முஸ்லிம் சமூகம் எடுத்துவரும் முயற்சிகள் உலகின் கவனத்தை ஈர்த்து வருவதாக சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து உள்ளார்.

வெளிநாடுகளில் மனிதாபிமான உதவிகளில் ஈடுபட்டதன் மூலம் சிங்கப்பூரில் உள்ள மலாய்/முஸ்லிம் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாவும் அவர் குறிப்பிட்டார்.

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனம், நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த மியன்மார் ஆகியவற்றுக்கான மனிதாபிமான உதவிகளில் மலாய்/முஸ்லிம் சமூகத்தினர் ஆதரவுக்கரம் நீட்டியதை அதற்கு அவர் உதாரணமாகச் சுட்டினார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருடாந்திர நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் திரண்டிருந்த மலாய் மக்கள் மத்தியில் அவரை உரையாற்றினார்.

காஸாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு சிங்கப்பூர் இதுவரை $20 மில்லியனுக்கும் மேல் நிதி உதவி அளித்துள்ளது. அதில் கிட்டத்தட்ட $2 மில்லியனை உள்ளூர் ரஸ்மத்தான் லில் அலாமின் அறநிறுவனம் (RLAF) திரட்டித் தந்ததாக அவர் தெரிவித்தார்.

காஸாவுக்கான உதவி குறித்து கடந்த சில வாரங்களாக பிரசார இயக்கம் நடத்தி அந்த அமைப்பு நிதி திரட்டியதாகவும் திரு மசகோஸ் கூறினார்.

“அதேபோன்ற இரக்க உணர்வுடன், கடந்த வார இறுதியில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மியன்மாரில் பேரிடர் மீட்பு முயற்சிகளில் தனது அதிகாரிகளை உடனடியாகக் களமிறக்கியது.

“இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) தொழுகைக்குப் பின்னர் சிங்கப்பூரில் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் மியன்மாரில் பாதிக்கப்பட்டோருக்காக அந்த அமைப்பு நிதி திரட்டியது.

“அந்த நிதி சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாகப் போய்ச் சேரும்.

“அனைவரும் இயன்றவரை தாராளமாக நிதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

“சிங்கப்பூரின் எல்லைகளைக் கடந்து, ஒன்றிணைந்து பணியாற்றி, ஒருவரை ஒருவர் கைதூக்கிவிடுவதில் மலாய்/முஸ்லிம் இவ்வாறுதான் செயல்பட்டு வருகிறது,” என்றார் முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு மசகோஸ்.

குறிப்புச் சொற்கள்