ஆய்வகத்தில் கடல் உணவுகளைத் தயாரிக்கும் அவான்த் புரோட்டின்ஸ் (Avant Proteins) அதன் செயல்பாட்டைச் சிங்கப்பூரில் நிறுத்துகிறது. உள்ளூர் நிறுவனமான அது செயல்பாட்டை நிறுத்துவது சிங்கப்பூரின் உணவு உற்பத்தித் துறைக்கு மேலும் அடியாக அமைந்துள்ளது. சிங்கப்பூர் அரசாங்கத்தின் அரசிதழில் இது குறித்த அறிவிப்பு உள்ளது. ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிவிப்பில், பொறுப்புகள் அதிகரித்ததால் தொழிலைக் கைவிடுவதாக நிறுவனம் குறிப்பிட்டது. அதேபோல் ஜனவரி 27ஆம் தேதி அந்நிறுவனம், அதன் லிங்க்ட்இன் பக்கத்தில் சிங்கப்பூரிலிருந்து வெளியேறி அயல் நாடுகளில் தொடரப்போவதாகவும் பதிவிட்டது. 2018ஆம் ஆண்டு அவான்த் புரோட்டின்ஸ் செயல்படத் தொடங்கியது. மீன்களைக் கொல்லாமல் ஆய்வகத்தின் வழி மீன் மாமிசத்தைத் தயாரிப்பதாக நிறுவனம் சந்தைக்குள் நுழைந்தது. ஆசியாவில் ஆய்வகத்தின் வழி மீன் மாமிசத்தைத் தயாரிக்கும் முதல் நிறுவனமாகவும் அவான்த் புரோட்டின்ஸ் விளங்கியது.
அண்மை ஆண்டுகளில் ஆய்வகத்தின் வழி உணவுகளைத் தயாரிக்கும் மூன்று நிறுவனங்கள் சிங்கப்பூரில் அதன் செயல்பாட்டை நிறுத்தியுள்ளன.

