தொழில்முறைத் தரத்தைப் பேணிக்காக்கும் அதேவேளையில், உளவியலாளர்களின் உள்ளூர் மனிதவளத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சியைச் சுகாதார அமைச்சு தீவிரப்படுத்துகிறது.
இதன் பொருட்டு, கல்வி அமைச்சுடனும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடனும் இணைந்து, இளநிலைப் பட்டக்கல்வி மேற்கொள்ளும் தகுதிபெறும் மாணவர்களுக்கு மருத்துவ உளவியலில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்கான பாதையை அது விரைவாக்கியுள்ளது.
மாணவர்களின் முதல் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கும் என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (மார்ச் 5) இடம்பெற்ற சுகாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பேசிய திரு கோ, இந்த விரைவான பாதை மூலம் மாணவர்கள் ஐந்து ஆண்டுகளில் கல்வி கற்க முடியும் என்றார்.

