அரசாங்க அதிகாரிபோல் ஆள்மாறாட்டம் செய்த மோசடியில் சம்பந்தப்பட்ட சந்தேகத்தின்பேரில் 27 வயது மலேசியர்மீது சனிக்கிழமை (மே 30) குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் சிங்கப்பூரில் இதுபோன்ற குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்ட 30ஆவது நபர் இவராவார்.
மோசடியில் ஏமாற்றப்பட்டவர்களிடம் பணம் போன்ற விலைமதிப்பான பொருள்களை நேரடியாக எடுத்துச் செல்ல உதவிட, குற்றக்கும்பல்களால் அவர் இங்கு அனுப்பப்பட்டார்.
வியாழக்கிழமை (மே 28) ஏமாற்றப்பட்டவரிடம் இருந்து மோசடி குறித்துப் புகார் பெறப்பட்டதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (மே 29) தெரிவித்தது.
தொலைபேசி அழைப்பு
தொலைக்காட்சிப் பெட்டி ஒன்றை பாதிக்கப்பட்டவர் வாங்கியதாக ஹார்வி நோர்மன் நிறுவனத்திலிருந்து அழைப்பதாக அடையாளம் தெரியாத மோசடிக்காரர் தொலைபேசியில் கூறியுள்ளார்.
அதனை பாதிப்படைந்தவர் மறுத்ததும் தொலைபேசி மற்றொரு மோசடிக்காரரிடம் வழங்கப்பட்டு, அந்த நபர் சிங்கப்பூர் நாணய ஆணைய அதிகாரி என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டார்.
அந்த மோசடிக்காரர், கள்ளப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஏமாற்றப்பட்டவரைக் குற்றஞ்சாட்டியுள்ளார். பிறகு அவரிடம் இருந்த பலவகை நகைகளை எடுத்துக்கொண்டு, ஆங்கர்வேல் கிரசென்டிற்கு அருகில் நிற்கும் ஒரு ஆடவரிடம் அவற்றை ஒப்படைக்கும்படி மோசடிக்காரர் கூறியுள்ளார்.
நகைகளை இழந்த பிறகு, தாம் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பாதிக்கப்பட்டவர், பிறகு காவல்துறையிடம் புகார் அளித்தார்.

