சிங்கப்பூரில் சட்டவிரோத குதிரைப் பந்தயம்: 69 பேர் கைது

சிங்கப்பூரில் சட்டவிரோத குதிரைப் பந்தயம்: 69 பேர் கைது

1 mins read
6852a8e8-e90b-4f09-9669-e428f96b88a4
கைப்பற்றப்பட்ட பணம். - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

தீவு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சட்டவிரோதக் குதிரைப் பந்தய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 69 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடைய வயது 29 முதல் 87 வரை என்று சிங்கப்பூர்க் காவல்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

அவர்களில் நால்வர் பெண்கள்.

மே 6ஆம் தேதிக்கும் மே 17ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் சோதனை நடத்தப்பட்டது.

குற்றப் புலனாய்வுத் துறை, ஏழு காவல் நிலையங்கள் ஆகியவற்றின் 160க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சிங்கப்பூரின் பல இடங்களில் சோதனைகளை நடத்தினர்.

ஜூரோங் வெஸ்ட், மார்சிலிங் லேன், நியூ அப்பர் சாங்கி ரோடு, யூனோஸ் கிரசென்ட், பிடோக், ரிவர்வேல் கிரசென்ட் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதில் 50,000 வெள்ளிக்கு மேற்பட்ட ரொக்கம், கைப்பேசிகள், குதிரைப் பந்தயத்திற்கான துணைக்கருவிகள் போன்றவை வழக்கிற்கு ஆதாரமாகக் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறை அறிக்கை கூறியது.

முதற்கட்ட விசாரணையில் 69 பேரும் பந்தயத் தரகர்களாகவும் இடைத்தரகர்களாகவும் பந்தயம் கட்டுபவர்களாகவும் செயல்பட்டது தெரியவந்துள்ளது.

2022 சூதாட்டக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

சட்டவிரோதச் சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் 10,000 வெள்ளி வரையிலான அபராதம், ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சட்டவிரோதப் பந்தயங்களை நடத்தினால் 500,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறிப்புச் சொற்கள்