மத்திய விரைவுச்சாலையில் அதிவேகத்தில் கார் பந்தயம்; இருவருக்குச் சிறை

மத்திய விரைவுச்சாலையில் அதிவேகத்தில் கார் பந்தயம்; இருவருக்குச் சிறை

1 mins read
09e59c87-7907-4a8a-a03a-fc42fd84a5bb
29 வயது டேமியன் சியா என்பவருக்கு நான்கு மாதங்கள் இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் 22 வயது ஷெர்மன் குவா என்பவருக்கு இரண்டு மாதங்கள் மூன்று வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. - படம்: பிக்சாபே
Google News Preferred Icon

மத்திய விரைவுச்சாலையில் மணிக்கு 203 கிலோமீட்டர் வரை அதிவேகமாக கார் ஓட்டி, ஸ்டாம்ஃபோர்ட் சாலையில் விபத்து நேரிடக் காரணமாக இருந்த இருவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

29 வயது டேமியன் சியா என்பவருக்கு நான்கு மாதங்கள் இரண்டு வாரச் சிறைத் தண்டனையும் 22 வயது ஷெர்மன் குவா என்பவருக்கு இரண்டு மாதங்கள் மூன்று வாரச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவர்கள் இருவரும் சிறையிலிருந்து விடுதலையான பிறகு, மூன்று ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதே வழக்குடன் தொடர்புடைய 35 வயது மார்கஸ் லாவ் என்பவருக்குக் கடந்த ஜூன் மாதம் 26ஆம் தேதியன்று ஏற்கெனவே நான்கு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில், ஆறு பேர் நகர்ப் பகுதியில் ஆபத்தான முறையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டனர். மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட விரைவுச்சாலையில், இவர்கள் மணிக்கு 203 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டினர். ஸ்டாம்ஃபோர்ட் சாலையில் ஒரு கார் திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் வந்த கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இவ்விபத்தில் போக்குவரத்துச் சமிக்ஞை விளக்கு, சாலைப் பலகைகள் மற்றும் பொதுச் சொத்துகள் சேதமடைந்தன. இந்த வழக்கில் தொடர்புடைய எஞ்சிய மூவர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்ற விசாரணையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்