தனியார் கூட்டுரிமைச் (ஸ்ட்ராட்டா) சொத்துகளில் கார் நிறுத்துமிட ஒதுக்கீடு குறித்து இரு பிரிவினருக்கு எழுந்த தகராறு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனையாளர்கள் புக்கிட் பாத்தோக்கில் உள்ள கட்டடத்தில் இருக்கும் கார் நிறுத்தத்தில் வணிகக் காரணத்தால் அதிக இடங்களைக் கோரியதில் இந்த பிரச்சினை உருவெடுத்தது.
எண்1, புக்கிட் பாத்தோக் கிரசென்ட் என்ற முகவரியில் உள்ள ‘WCEGA பிளாசா அண்ட் டவர்’ எனப்படும் இரண்டு கட்டடங்களில் அந்த இரு பிரிவினரும் கார் வணிகம் செய்கின்றனர். அந்த இரு நிறுவனங்களுக்கும் கார் நிறுத்தும் இடங்கள் அத்தியாவசியம் ஆகும்.
அந்தப் பெரிய வணிகக் கட்டடங்களில் மொத்தம் 913 நிறுவனங்கள் செயல்படுகின்றன. கார் நிறுத்த 920 இடங்கள் உள்ளன. WCEGA பிளாசா கட்டடத்தில் மட்டும் செயல்படும் 492 வணிகங்களில் நான்கில் ஒரு பங்கு பயன்படுத்தப்பட்ட வாகன விற்பனை நிறுவனங்கள் ஆகும்.
கார் நிறுத்தம் குறித்து நீதிமன்றத்தை நாடியது எட்மண்ட் மோட்டார் என்ற ஓர் நிறுவனம். அங்கு செயல்பட்ட WCEGA பயன்படுத்திய கார் நிறுவன சங்கத்துக்கு (WUCA) அதிக கார்நிறுத்தும் இடங்கள் ஒரு சார்பாக ஒதுக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்டடத்தின் நிலப்பட்டா கூட்டுரிமை நிர்வாகத்தின் (MCST) மீது எட்மண்ட் நிறுவனம் வழக்கு தொடுத்தது.
போதிய அளவு கார் நிறுத்த இடங்கள் வழங்கப்படாததற்கு இழப்பீடு கோரிய அந்தச் சங்கத்தின் முன்னாள் உறுப்பினராக இருந்த எட்மண்ட் நிறுவனத்தின் வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
நிலப்பட்டா கூட்டுரிமை நிர்வாகப் பொதுக் கூட்டங்களில் உரிமையாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொள்வதில் வேறுபாடு உள்ளது.
உரிமையாளர் அல்லது நிர்வாகத்தின் சார்பாக கலந்துகொள்வோர் நிறுவனத்தின் சார்பில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகிறார். ஆனால், பிரதிநிதி என்ற முறையில் கலந்துகொள்வோர், பல மாறுபட்ட உரிமையாளர்களுக்கென முடிவெடுக்க முடியாது.
தொடர்புடைய செய்திகள்
ஆயினும், ஒரு கட்டடத்தில் பல வணிகங்களை வைத்திருக்கும் ஒரே உரிமையாளர் அவற்றின் சார்பில் ஒரு பிரதிநிதியைக் கொண்டு வாக்களிக்கலாம் என்ற தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
அதிகப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவதை கட்டுப்படுத்தும் விதமாக தற்போதைய விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேசிய வளர்ச்சி அமைச்சு, நிலப்பட்டா கூட்டுரிமை நிர்வாக விதிமுறைகளைச் சீராய்வு செய்துவருவதாக கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது.
ஏனெனில் அதிக பிரநிதிகள், பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்து அங்கு எடுக்கப்படும் முடிவுகளில் ஒரு சாராருக்குச் சாதகமாக நடந்துகொள்ள வாய்ப்புள்ளது.

