அரசு இணை நிதியுடன் கூட்டுரிமைக் குடியிருப்புகளில் 2,000 மின்வாகன மின்னூட்டிகள்

அரசு இணை நிதியுடன் கூட்டுரிமைக் குடியிருப்புகளில் 2,000 மின்வாகன மின்னூட்டிகள்

2 mins read
d061eda2-80ee-425a-af1e-1be6f88fb984
இந்த இணை நிதி திட்டத்தின்கீழ், கூட்டுரிமைக் குடியிருப்புகள் மின்சார வாகன மின்னூட்டிகளை நிறுவுவதற்கான செலவுகளில் பாதியை ஈடுசெய்ய முடியும். - படம்: எஸ்பி குழுமம்
Google News Preferred Icon

அரசாங்க இணை நிதியுதவியைப் பயன்படுத்தி, 673 கூட்டுரிமைக் குடியிருப்பு வளாகங்களில் 2,000 மின்சார வாகன மின்னூட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. இன்னும் 1,500 மின்னூட்டிகள் வரை அல்லது 2026 டிசம்பர் 31 வரை, எது முதலில் வருகிறதோ, அதுவரை இந்த நிதியுதவி கிடைக்கும்.

கூட்டுரிமை வீட்டு வளாகங்களில் நிறுவப்பட்டுள்ள மின்சார வாகன மின்னூட்டிகளுக்கான இந்த அண்மைய எண்ணிக்கை, நிலப் போக்குவரத்து ஆணையம் மார்ச் மாதம் வெளியிட்ட கடைசி அறிவிப்பிலிருந்து ஏறக்குறைய 300 அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.

புதன்கிழமை (ஜூலை 9) ஆணையம் வெளியிட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில், அடுத்த 1,500 மின்னூட்டிகளுக்கு, ஆரம்ப நிறுவல் செலவில் 50 விழுக்காடு வரை இணை நிதி வழங்கப்படும் என்றும் ஒரு மின்னூட்டிக்கு அந்த நிதியில் $3,000 வரம்பு விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ஜனவரி, ஜூன் மாதங்களுக்கு இடையில், 3,500 கிலோவுக்குமேல் எடையுள்ள வணிக மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்கான ஒப்புதலுக்காக 28 விண்ணப்பங்களைப் பெற்றதாக புதன்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் ஆணையம் தெரிவித்தது. அவற்றில், 27 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள ஒன்று பரிசீலனையில் உள்ளது.

கனரக வணிக மின்சார வாகனங்களுக்கான இந்த ஊக்குவிப்புத் திட்டம், மின்னூட்டிகளை நிறுவுவதற்கான செலவில் பாதியளவு வரை இணை நிதியுதவி வழங்கும் மானியத்துடன் (ஒரு மின்னூட்டிக்கு $30,000 வரம்பு) செயல்படுகிறது. ‘மின்சார கனரக வாகன மின்னூட்டி மானியம்’ என்று அழைக்கப்படும் இந்தத் திட்டம், 2026 ஜனவரி 1லிருந்து மூன்று ஆண்டுகளுக்குக் கிடைக்கும்.

ஜூன் நிலவரப்படி, சிங்கப்பூரில் 14,741 பொதுவில் அணுகக்கூடிய மின்சார வாகன மின்னூட்டி இடங்கள் உள்ளன. இவற்றில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக கார் நிறுத்துமிடங்கள், வணிகக் கட்டடங்கள், கூட்டுரிமைக் குடியிருப்புகளில் நிறுவப்பட்ட மின்னூட்டிகளும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்