முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் அர்ஜுன் மேனன் மலாவியில் கொலை

முன்னாள் கிரிக்கெட் வீரர், பயிற்சியாளர் அர்ஜுன் மேனன் மலாவியில் கொலை

2 mins read
16aa1f91-c691-4a70-b73d-fe26949e25c5
சில ஆண்டுகளுக்கு முன், சிங்கப்பூர் ஊடகத்தினருக்கு கிரிக்கெட் விளையாட்டு விழிப்புணர்வு பயிற்சி நடத்தும் அர்ஜுன் மேனன். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஒரு விளையாட்டு வீரராகவும் சரி, பயிற்றுவிப்பாளராகவும் சரி, முன்னாள் தேசிய கிரிக்கெட் வீரரின் அந்த விளையாட்டின் மேல் இருந்த தணியாத தாகம் கண்கூடாகத் தெரிந்தது.

கிரிக்கெட் மீது அவருக்கு எப்பொழுதும் இருந்த மோகத்தால் அவர் பல கண்டங்களுக்கும் சென்றார்.

ஆதனால், அவரது இந்தப் பயணம் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அவரை மலாவி நாட்டின் கிரிக்கெட் விளையாட்டின் நடவடிக்கைகளை கவனிக்கும் மேலாளர் பொறுப்பை 48 வயது அர்ஜுன் மேனனுக்குப் பெற்று தந்தது. ஆனால், அவருடைய இந்த கிரிக்கெட் பயணம் இம்மாதம் 10ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

இதுபற்றிக் கூறும் மலாவி நாட்டு தேசிய விளையாட்டு மன்றத் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஹென்ரி கமாட்டா, மேனன் அவரது இல்லத்தில் மே 10ஆம் தேதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் தகவலறிய தொடர்புகொண்டபோது சிங்கப்பூர் கிரிக்கெட் சங்கத் தலைவர் மஹ்முத் கஸ்நாவி, மேனனின் மரணம் தமக்கு ஆழ்ந்த கவலையளித்துள்ளதாகக் கூறினார். அவரது கொலை பற்றி மலாவியில் இருந்து வெளியாகும் தகவல் அவர் சந்தேகத்துக்குரிய நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று மஹ்முத் கஸ்நாவி தெரிவித்தார்.

திரு அர்ஜுன் மேனன் குண்டர்களால் தாக்கப்பட்டார் என்று நேஷன் பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஃபேஸ்புக் பதிவு கூறுகிறது.

மலாவி நாட்டின் கிரிக்கெட் அணி தற்பொழுது உலக அரங்கில் பெற்றுவரும் வெற்றிக்கு திரு அர்ஜுன் மேனனின் பணியைக் காரணமாகப் புகழாரம் சூட்டிய அந்த நிறுவனம், அவரது முயற்சியால் மலாவி நாட்டுக்கு மூன்று விளையாட்டு விருதுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தது.

திரு மேனனுடன் மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் பேசியபோது அவருக்கு கிரிக்கெட் மீது தீராத மோகம் இருந்தது தெரியவந்ததாக திரு கஸ்நாவி சொன்னார்.

குறிப்புச் சொற்கள்