பிணையில் வெளிவந்த வெளிநாட்டவர் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

பிணையில் வெளிவந்த வெளிநாட்டவர் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு

1 mins read
ae1f45ef-89b3-44bc-a708-eacd36dc9f04
படம்: - பிக்சாபே
Google News Preferred Icon

பிணையில் வெளிவந்த பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பிரமாணிக் ஷமிம், வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

போதைப்பொருள் தொடர்பான இரு குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த ஷமிம், தற்போது வழிப்பறி குற்றச்சாட்டு ஒன்றையும் எதிர்நோக்குகிறார்.

இந்தக் குற்றத்தை ஷமிம், சக நாட்டவர்களான சர்க்கர் சுமன், ஷிக் முகமது கவுசர், மாமுன் அல், உல்லா அகமது ஆகியோருடன் இணைந்து புரிந்ததாக கூறப்பட்டது.

அவர்கள் ஐவர் மீதும் பிப்ரவரி 15ஆம் தேதி (வியாழக்கிழமை) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும் 7.45 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காலாங்கில் இருக்கும் மெர்டேக்கா பாலத்திற்கு அடியில் அக்கும்பல் 38 வயது மதிக்கத்தக்க ஆடவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரை அவர்கள் தடி, மிதிவண்டியின் சங்கிலி ஆகியவற்றைக் கொண்டு தாக்கியதாகவும் அவரிடமிருந்து $60 ரொக்கத்தையும் $800 மதிக்கத்தக்க கைப்பேசியையும் அக்கும்பல் பறித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பிடோக் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அக்கும்பலை பிப்ரவரி 14ஆம் தேதி கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவரின் கைப்பேசியையும் மீட்டனர்.

இவ்வழக்கின் விசாரணை பிப்ரவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
குற்றம்போதைப்பொருள்கடத்தல்பிணைபங்ளாதேஷ்