ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரைப் பகுதியில் 1987ஆம் ஆண்டுமுதல் இயங்கிவரும் ‘ஜம்போ சீஃபூட்’ எனப்படும் கடல் உணவு நிலையம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நிரந்தரமாக மூடப்படவுள்ளது.
அந்த இடத்துக்கான குத்தகை முடிவுக்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அதனை நிர்வகிக்கும் ஜம்போ குழுமம் வெள்ளிக்கிழமை (மே 29) தெரிவித்தது.
ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் அதன் முதல் உணவகத்தைத் தொடங்கிய அக்குழுமம், சிங்கப்பூரின் பல பகுதிகளில் இயங்கிவருகிறது. செந்தோசா தீவு, சாங்கி விமான நிலையம், ஆர்ச்சர்ட், டெம்ப்ஸி ஹில், ரிவர் வாக் உட்பட மொத்தம் ஏழு உணவகங்களை அக்குழுமம் நடத்திவருகிறது.
உணவகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளரான தேசிய பூங்காக் கழகம், ஈஸ்ட் கோஸ்ட்டில் உணவகங்கள் இருக்கும் பகுதியோடு அவ்வட்டாரத்தை முழுமையாக மேம்படுத்தத் திட்டமிடுவதாகவும் ஜம்போ குழுமம் குறிப்பிட்டது.
குத்தகைக் காலம் முடிந்தபிறகு உணவகம் மூடப்படும். அதனால் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையும் அதன் நிதியாண்டில், லாபத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதைக் குழுமம் உறுதிப்படுத்தியது.
ஆனால் அடுத்த ஆண்டு அதன் தாக்கம் உணரப்படும் என்று கூறப்படுகிறது.

