ஆவ்டி கார் சேவை நிலையத்தில் வெடிப்பு; நிறுவனத்திற்கு $12,000 அபராதம்

ஆவ்டி கார் சேவை நிலையத்தில் வெடிப்பு; நிறுவனத்திற்கு $12,000 அபராதம்

2 mins read
136721b0-aa43-4fb1-94d7-a42f2082a186
மார்ச் 7, 2023ல் சேவை நிலையத்தின் ஒரு பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு, சுமார் 100 பேரை வெளியேற்ற வழிவகுத்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஆபத்தான முறையில் மின்தூக்கி பயன்படுத்தியதால், ஆவ்டி கார் சேவை நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்திற்காகக் கார் வர்த்தக நிறுவனம் ஒன்றுக்கு $12,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு உபி பகுதியில் உள்ள ஆவ்டி கார் சேவை நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பினால் அங்குள்ள சுவர் ஒன்றில் பெரிய துளை ஏற்பட்டது.

தாங்கள் வைத்திருந்த மின்தூக்கியை ஆபத்தான முறையில் பயன்படுத்தியபோதிலும், அதன் செயல்பாட்டை உடனடியாக நிறுத்தத் தவறியதை ஏற்றுக்கொண்டு, பிரீமியம் ஆட்டோமொபில்ஸ் நிறுவனம் செப்டம்பர் 10ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொண்டது.

மார்ச் 7, 2023ல் அந்தச் சேவை நிலையத்தின் ஒரு பகுதியில் அந்த வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து கிட்டத்தட்ட 100 பேர் அங்கிருந்து வெளியேறினர்.

அருகிலிருந்த செங்கல் சுவர்கள், வரவேற்புப் பகுதி, மின்தூக்கி இறங்கு தளத்தின் கதவுகள் ஆகியவை சேதமடைந்தன. 

வெடிப்புச் சம்பவத்தின்போது ஒருவர் மின்தூக்கியைப் பயன்படுத்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று கட்டட, கட்டுமான ஆணையத்தின் வழக்கறிஞர் பெர்டினஸ் டியோ கூறினார்.

வெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகு, மின்தூக்கியின் இயந்திர அறையில் பிரீமியம் ஆட்டோமொபில்ஸ் நிறுவனம் 2002ஆம் ஆண்டில் அமைத்திருந்த கழிவு எண்ணெய்த் தொட்டி ஒன்று இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

சேவை நிலையத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களிலிருந்து குழாய்களில் ஊற்றப்படும் மோட்டார் வாகனங்களின் கழிவு எண்ணெய்யைப் பெறுவதே அந்த தொட்டியின் நோக்கம்.

மாதாந்திர பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு போன்றவற்றுக்காக பிரீமியம் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், மின்தூக்கி சேவை ஒப்பந்தக்காரரை நியமித்திருந்தது.

ஆனால் அந்த ஒப்பந்தக்காரரிடம் கழிவு எண்ணெய் தொட்டியைப் பற்றித் தெரிவிக்கவில்லை என்றும் பிசிஏ வழக்கறிஞர் டியோ கூறினார். 

கட்டுப்பாட்டு மின்னியல் சாதனத்தில் ஏற்பட்ட மின்சார தீப்பொறிகள்  கழிவு எண்ணெய் தொட்டியிலிருந்து இயந்திர அறையில் தேங்கியிருந்த எரியக்கூடிய ஆவிகளை பற்றவைத்தது, வெடிப்புக்குக் காரணம்.

கழிவு எண்ணெய் தொட்டியை நிறுவுவதற்கு முன்னரும் பின்னரும் அதற்கான தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்க பிரீமியம் ஆட்டோமொபைல்ஸ் தவறிவிட்டதால், $12,000 அபராதம் கோரப்பட்டது.

குறிப்புச் சொற்கள்