1950களில் சீன நாட்டவர்கள் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றது குறித்த கண்காட்சி

1950களில் சீன நாட்டவர்கள் சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றது குறித்த கண்காட்சி

2 mins read
2f1dba00-0457-45ce-9ea8-df947f81ef72
கண்காட்சியின் தொடக்க விழாவில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சிங்கப்பூரில் சீனக் குடிமக்கள் எப்படி சிங்கப்பூர்க் குடியுரிமை பெற்றனர் என்பது குறித்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபை அந்தக் கண்காட்சியை நடத்துகிறது. சபையின் கட்டடத்தில் திங்கட்கிழமை (ஏப்ரல் 7) கண்காட்சி தொடங்கியது.

1947ஆம் ஆண்டு முதல் 1957ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் வேலை செய்து வந்த சீனக் குடிமக்களை சிங்கப்பூர் குடியுரிமை பெற வைப்பத்தில் சிங்கப்பூர் சீன வர்த்தக, தொழில் சபைக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூர் குடியுரிமை சட்டத்தின்படி சிங்கப்பூரில் குறைந்தது எட்டு ஆண்டுகள் தங்கியிருந்தால் அவர்கள் சிங்கப்பூரர் ஆகலாம். வாக்களிக்கும் உரிமையும் உண்டு.

1957ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அந்தச் சட்டம் நடப்புக்கு வந்தது. அப்போது மூன்று மாதங்களில் மட்டும் 220,000க்கும் அதிகமானவர்கள் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றனர்.

“Sojourners to Citizens: The Citizenship Journey” என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அந்தக் கண்காட்சியில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இக்கண்காட்சி பின்னர் பள்ளிகள், நூலகங்கள், சமூக நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரும் மாதங்களில் நடக்கும்.

நன்யாங் பெண்கள் ஹை பள்ளி, சாங்காட் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகளிலும் கண்காட்சி நடப்பதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

கண்காட்சியின் தொடக்க விழாவில் கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கலந்துகொண்டார்.

“அந்தக் காலகட்டத்தில் இதே கட்டடத்திற்கு வெளியே குடியுரிமை பெற மக்கள் எவ்வாறு ஆவலாகக் காத்திருந்தனர் என்பதை இக்கண்காட்சி மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது,” என்று அமைச்சர் டோங் குறிப்பிட்டார்.

“20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிங்கப்பூருக்கு ஆசியாவில் இருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக வந்தனர். தோட்டங்கள், கட்டுமானங்கள் எனப் பல துறைகளில் கடுமையாக உழைத்து சிங்கப்பூரை உருவாக்கினர்.

இருப்பினும் பலர் எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு அப்போது பிறப்பிக்கப்பட்ட குடியுரிமைச் சட்டம் பெரும் நன்மையைக் கொடுத்தது,” என்றார் அமைச்சர் டோங்.

குறிப்புச் சொற்கள்