சிங்கப்பூர் சாலைகளில் அவ்வப்போது மனம் கவரும் காட்சிகள் நடப்பது வழக்கம்.
சாலையைக் கடக்கத் தவிக்கும் மூத்தோர், பிள்ளைகளுக்கு வாகன ஓட்டிகள் உதவுவது, திடீர் வெள்ளத்தின்போது பேருந்து ஒட்டுநர்கள் நடையர்களை அனுசரித்து வாகனம் ஓட்டுவது எனச் சில காட்சிகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
அந்த வரிசையில் தற்போது, கோழிகளும் அதன் குஞ்சுகளும் பத்திரமாகச் சாலையைக் கடக்க வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தின் வேகத்தைக் குறைத்து அவற்றைப் பாதுகாப்பாக வழி அனுப்பி வைத்தனர்.
அதுதொடர்பான காணொளி தற்போது சமூக ஊடகத்தில் அதிகமாகப் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.
ஜனவரி 23ஆம் தேதி காலை அப்பர் தாம்சன் சாலையில் அந்தச் சம்பவம் நடந்தது. கோழியும் அதன் ஐந்து குஞ்சுகளும் சாலையைக் கடக்கத் தடுமாறியபோது சில கார்கள், லாரி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை வழிவிட்டு நின்றன.
கோழிகள் திடீரெனச் சாலையைக் கடப்பது போக்குவரத்து சார்ந்த விபத்துகளை ஏற்படுத்தலாம் என்று சில இணையவாசிகள் அக்கறை தெரிவித்தனர்.

