ஈசூனில் கார் விபத்து: ஓட்டுநர் எங்கே?

ஈசூனில் கார் விபத்து: ஓட்டுநர் எங்கே?

1 mins read
8602fc86-e417-4787-8c03-a278bf381918
பக்கவாட்டில் கார் சாய்ந்து கிடப்பதைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பதிவேற்றப்பட்டது. - படம்: Singapore Roads Accident.com / ஃபேஸ்புக்
Google News Preferred Icon

ஈசூனில் வியாழக்கிழமை (நவம்பர் 21) நிகழ்ந்த கார் விபத்தில் சம்பந்தப்பட்ட கார் ஓட்டுநரைக் காணவில்லை. அது பற்றி காவல்துறை விசாரித்து வருகிறது.

ஈசூன் சென்ட்ரல்-ஈசூன் சென்ட்ரல் 2 சந்திப்பில் விபத்து நிகழ்ந்தது பற்றி அன்று காலை 8.30 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறை விரைந்து சென்றபோது அங்கு விபத்தில் சிக்கிய காரின் ஓட்டுநர் இல்லை.

இதற்கிடையே, விபத்து தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டது. நீல நிற கார் ஒன்று நடைபாதையில் பக்கவாட்டில் சாய்ந்து கிடந்ததை அந்தக் காணொளி காட்டியது.

காரின் முன்பக்கம் பலமாகச் சேதமடைந்திருந்தது. விபத்து நிகழ்ந்த நடைபாதையின் ஒரு பகுதி, புலனாய்வுக்காகச் சுற்றி மறைக்கப்பட்டு இருந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமையும் ஒரு கார் விபத்து நிகழ்ந்தது. வாட்டர் லூ ஸ்திரீட் அருகே கார் ஒன்று கவிழ்ந்துவிட்டதாக அன்று மாலை 4.20 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.

இரு வழி வீதி ஒன்றில் இடதுபக்கம் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது வெண்ணிற வோல்க்ஸ்வேகன் கார் ஒன்று மோதிய பிறகு பக்கவாட்டில் சாய்ந்ததை சமூக ஊடகக் காணொளியில் காணமுடிந்தது.

குறிப்புச் சொற்கள்
கார்விபத்துவிசாரணை