சிறார் பாலியல் ஆவணங்கள்; ஆயுதப் படை வீரர்மீது வழக்கு

சிறார் பாலியல் ஆவணங்கள்; ஆயுதப் படை வீரர்மீது வழக்கு

1 mins read
62ffa8b0-3392-4c6d-959d-2f92a7b86da0
சிறார் தொடர்புடைய பாலியல் ஆவணங்கள் வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் ஆயுதப் படையில் ‘கேப்டன்’ பொறுப்பில் உள்ள ஓர் அதிகாரி, சிறார் தொடர்புடைய பாலியல் ஆவணங்களை வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

டிலான் யூன் கெர் டெர்ன் என்னும் அந்த 26 வயது அதிகாரி மேலும் 20 பாலியல் படங்களையும் வைத்திருந்தார்.

2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேலாங் ஈஸ்ட்டில் உள்ள வீட்டில் அந்த ஆடவர் சிக்கினார்.

சிறார் தொடர்புடைய பாலியல் ஆவணங்கள் படங்களாக இருந்தனவா அல்லது காணொளிகளாக இருந்தனவா என்பது குறித்த விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை.

யூன் அவரது பொறுப்பிலிருந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.

“சிங்கப்பூர் ஆயுதப் படை தனது சேவைப் பணியாளர்களை ஒழுக்கம், நேர்மையின் உயர் தரநிலைகளைக் கடைப்பிடிக்கச் செய்கிறது. விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்படும் சேவைப் பணியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சிங்கப்பூர் ஆயுதப் படையின் பேச்சாளர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படுவதால் வழக்கு குறித்து மேல் விவரங்கள் தற்போது வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்த நீதிமன்ற விசாரணை ஆகஸ்ட் 12ஆம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

சிறார் தொடர்புடைய பாலியல் ஆவணங்களை வைத்திருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படும்.

பாலியல் படங்கள் வைத்திருந்தால் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, 20,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்
பாலியல்சிறார்குற்றம்