பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர்

பேருந்து - கார் மோதல்; மூவர் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர்

1 mins read
காரில் கள்ளச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன
e363c0b1-67a7-421f-8677-b439603fe4c7
உட்லண்ட்சில் பேருந்துடன் மோதிய காரில் கள்ளச் சிகரெட்டுகள் காணப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் சுங்கத் துறையினருக்குத் தகவல் தரப்பட்டது. - படம்: சாவ்பாவ் வாசகர்
Google News Preferred Icon

உட்லண்ட்ஸ் வட்டாரத்தில், ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே சேவை வழங்கும் ஏசி7 பேருந்தும் ஒரு காரும் மோதிக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து பேருந்தில் பயணம் செய்த மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

உட்லண்ட்ஸ் அவென்யூ 9க்கும் உட்லண்ட்ஸ் தொழிலியல் பூங்கா E4க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில் நடந்த மோதல் குறித்து நவம்பர் 20ஆம் தேதி பிற்பகல் 12.55 மணிக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.

சம்பவம் தொடர்பான படத்தில் காரின் முன்பக்கம் மோசமாகச் சேதமடைந்திருப்பதைக் காணமுடிகிறது.

பேருந்தின் வலப்பக்கத்திலும் கீறல்கள் காணப்படுகின்றன.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பேருந்துப் பயணிகள் மூவர் சுயநினைவுடன் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன. அவர்கள் 48 வயதுக்கும் 78 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

பேருந்துடன் மோதிய காரில் கள்ளச் சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதுகுறித்து சிங்கப்பூர் சுங்கத் துறைக்குத் தகவல் தரப்பட்டது.

சம்பவ இடத்தைக் காட்டும் படங்கள் அந்த கார் மலேசியாவில் பதிவு செய்யப்பட்டதைக் காட்டுகின்றன.

விபத்து குறித்துக் காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்
உட்லண்ட்ஸ்பேருந்துகார்மோதல்காவல்துறைசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைகள்ளச் சிகரெட்டுகள்