ஹவ்காங் அவென்யூ 8ல் உள்ள ஷின்மின் உயர்நிலைப் பள்ளிக்கு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மாணவர்களும் பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் பள்ளியில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.
பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கும் பாதுகாவலர்களுக்கும் அனுப்பப்பட்ட செய்தியில், வியாழக்கிழமை காலை 8.28 மணிக்கு மிரட்டல் குறித்துத் தெரியவந்ததும் மாணவர்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
“வெடிகுண்டு உள்ளதா என்பதை உறுதிசெய்ய காவல்துறையினர் பள்ளியில் முழுமையாகத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்குரிய எதையும் அவர்கள் கண்டுபிடிக்கவில்லை,” என்று பள்ளி நிர்வாகம் உறுதிசெய்தது.
பள்ளி மாணவர்கள், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
மாணவர்கள் அனைவரும் வகுப்பறைக்கு மீண்டும் திரும்பிவிட்டதாகவும் பாடங்கள் வழக்கம்போலத் தொடங்கியுள்ளதையும் நிர்வாகம் குறிப்பிட்டது.
மேல்விவரங்களுக்குக் கல்வி அமைச்சையும் காவல்துறையையும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தொடர்புகொண்டுள்ளது.


